மகளிர் உரிமை தொகை.. கண்காணிக்கும் ஸ்டாலின்.. தமிழ்நாடு முழுக்க 10,000 முகாமில்.. என்ன நடக்குது?
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக கண்காணித்து வருகிறார். இந்த முகாம்களில் பணிகள் முறையாக நடக்கிறதா, மக்களின் விண்ணப்பங்கள் மற்றும் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதை அவர் தீவிரமாக விசாரித்து வருகிறாராம்.

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்வதற்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அவசரப்படாமல் பொறுமையாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை முகாம்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பல திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
மகளிர் உரிமைத் தொகைக்கான விரிவாக்க விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பல பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் இல்லம் தேடி வரவில்லை என்றாலோ, அதிகாரிகள் நேரடியாக வழங்கத் தவறினாலோ கவலைப்படத் தேவையில்லை. அதற்கு பதிலாக, சிறப்பு முகாம்கள் வாயிலாக விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மகளிர் உரிமைத் தொகை - யாருக்கெல்லாம் கிடைக்கும்?
விண்ணப்பங்கள் பெறப்பட்டு 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் வரை இதற்கான முகாம்கள் நடைபெறும். இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விதிகள் உள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட விதிகளின் மூலம் யாருக்கெல்லாம் பணம் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
அரசு ஊழியர்கள், நேரடியாக அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிப் பணிகளில் இருப்பவர்கள், குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி பணிகளில் இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் 19,487 முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
மாநிலம் முழுவதும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் நடத்துவது குறித்து 19.06.2025 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், மேலும் பெண்கள் பயனடைய ஏதுவாக, ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன் மேலும் சில விதிவிலக்குகள் வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகளுடன் கூடுதலாக சில விதிவிலக்குகளை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள், அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
இயக்குநர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அவர்களின் கருத்துருவினை அரசு கவனமாக ஆய்வு செய்தது. ஏற்கனவே உள்ள மூன்று விதிவிலக்குகளுடன் கூடுதலாக மூன்று விதிவிலக்குகளை வழங்க அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.












Click it and Unblock the Notifications