கிட்னி பாதித்த சேலம் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல்.. தலையை வருடிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் சிறுமி ஜனனியை இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
Recommended Video
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்- ராஜநந்தினி தம்பதியின் மகள் ஜனனி. இவர் அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு திடீரென பள்ளியில் மயங்கி விழுந்த ஜனனி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் ஜனனி இருப்பதையும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுநீரகம்
இவருக்கு தாய் ராஜநந்தினி ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்ததன் பேரில் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில நாட்கள் கழித்து அந்த சிறுநீரகமும் செயலிழந்து போனதால் ராஜநந்தினி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு உதவி கேட்டு முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார்.

சிகிச்சை
ஆனால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து ராஜநந்தினிக்கு பதில் கிடைத்தது. சிகிச்சைக்கு போதிய வருமானம் இல்லாததால் தொடர்ந்து ஜனனிக்கு செலவு செய்ய முடியாததால் மகளையும் மனைவியையும் விட்டுவிட்டு விஜயகுமார் பிரிந்து சென்றுவிட்டார். இந்த இக்கட்டான நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் முதல்வர் ஸ்டாலினின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார்.

குழந்தையுடன் அவதி
கணவன் கைவிட்ட நிலையில் உடல்நலம் பாதித்த குழந்தையுடன் அவதிப்படும் ராஜநந்தினி தமிழக அரசின் உதவியை நாடினார். தங்களுக்கு உதவி செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு சிறுமியும் அவரது தாயும் வீடியோ அனுப்பினர். அப்போது சிறுமி ஜனனி, சிஎம் சார்! எனக்கு சிறுநீரகம் பாதித்துள்ளது, நான் சீக்கிரமாக செத்துவிடுவேன் என எல்லாரும் சொல்கிறார்கள், எனக்கு ஹெல்ப் செய்ய முடியுமா என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

சிகிச்சை
இந்த வீடியோ ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றவுடன் இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தைரியமாக இருக்குமாறும், சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் பேசியிருப்பதாகவும் சிறுமியிடம் முதல்வர் கூறினார்.

ஸ்டான்லி மருத்துவமனை
இந்த நிலையில் சிறுமி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் இருக்கும் ஜனனியை நேரில் சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பான சிகிச்சை கொடுக்க முதல்வர் கூறியுள்ளார், எனவே தைரியமாக இருக்குமாறும் சிறுமியிடம் ஆறுதல் கூறினார்.

ஜனனியை சந்தித்து ஆறுதல்
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் திடீரென நேரிடையாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். முதல்வர் வந்தது ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டாலின் சிறுமி ஜனனி இருந்த வார்டுக்கு நேரடியாகச் சென்றார் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். எதற்கும் கவலைப்படாமல் தைரியமாக இருக்குமாறும், சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்றும் நாங்கள் இருக்கிறோம் என நம்பிக்கை தெரிவித்தார். முதல்வரே நேரில் வந்ததால் சிறுமியும் தாயும் நெகிழ்ந்துபோய் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications