17 வயதில் கோவை மாநாட்டில் முழங்கிய அந்த பேச்சும் அடங்கா கரவொலியும்- முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: கோவையில் 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் முழங்கிய தியாகம் குறித்த பேச்சும் அதற்காக கிடைத்த கரவொலியும் இன்று தமது காதுகளில் எதிரொலிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் நடத்திய பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்க தொடங்கியதும் தமிழகம் தலைநிமிர தொடங்கிவிட்டது. இதை மக்கள் நம் கண்கூடாக பார்க்கின்றனர். சிறுபான்மை ஆணையமானது தலைநிமிரும் தமிழகம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியை நடத்தி உள்ளது. இன்றைய கால கட்டத்துக்கு இது மிக மிக முக்கியமானது.

கோவை மாநாடு
இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்களைப் பார்க்கும் போது என் கல்லூரி கால நினைவுகள் வருகின்றன. 1971-ம் ஆண்டு தமிழகத்தில் இந்தி திணிப்பு முயற்சி நடைபெற்ற நேரத்தில் கோவையில் மாணவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநாடு நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது எல்.கணேசன் மாநாட்டு தலைவராக இருந்தார். அவரிடம் நான் 2 நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டேன்.. அவரும் அனுமதி தந்தார். அப்போது, இந்தி திணிப்பை எதிர்க்கும் மாணவர் பட்டாளத்தில் என்னையும் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தேன். அது தியாகத்துக்குரிய பட்டியலாக இருந்தாலும் அதில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்.. தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.

தியாகத்துக்கு தயார்
அத்துடன், மொழிக்காக- இனத்துக்காக போராட வேண்டிய சூழலில் உயிரை இழக்க வேண்டிய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றேன். அதே மேடையில் இன்னொன்றையும் நான் சொன்னேன்.. என் தந்தைக்கு 4 ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். அந்த 4 ஆண் பிள்ளைகளில் நான் ஒரு பிள்ளை போய்விட்டால் என் தந்தை நிச்சயம் கவலைப்படமாட்டார்.. தன் மொழிக்காக, இனத்துக்காக தனயனை இழந்த தந்தை என்று அவரை நாடு பாராட்டும்- போற்றும்; அந்த பெருமையை வாங்கி தந்த பெருமை எனக்கு வந்து சேரும் என்று அப்போது நான் முழங்கினேன். அப்போது என் வயது 17. அப்போது எழும்பிய கரவொலி, இன்னமும் என் காதிகளில் எதிரொலித்து கொண்டே இருக்கிறது.

மாணவர் தலைவர்கள்
திராவிட, தேசிய, பொதுவுடைமை இயக்கங்களில் பற்று கொண்ட, படிக்கக் கூடிய மாணவர்கள்தான் இது போன்ற போட்டிகளில் அதிகம் பங்கேற்பர். அவர்கள்தான் பரிசுகளைப் பெற்றனர். பின்னாட்களில் அவர்கள் மாணவர் தலைவர்களாக அரசியல் இயக்கங்களில் பணியாற்றி இருக்கின்றனர். திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதற்கு ஒரு அடையாளம். இன்றைக்கும் மொழிப்போர் தளபதியாக போற்றி பாராட்டக் கூடியவர் எல்.கணேசன்; மதிமுக பொதுச்செயலாளர் வைகோ; காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸ். முன்னாள் சட்டசபை சபாநாயகர் காளிமுத்து.. விருதுநகர் சீனிவாசன் என சொல்லிக் கொண்டே போகலாம்.

மேடையும் கோட்டையும்
மாணவர்களாகிய நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பதற்காக இதனை சொல்லவில்லை. உங்களுடைய பேச்சாற்றலை மேலும் மேலும் நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். பேச்சு என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்க்காது. மேடைகளை ஆட்சி செய்வது என்பதும் கோடையை ஆட்சி செய்வது என்பதும் ஒன்று. அவ்வளவு கடினமானது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications