விசாரணை கைதி தங்கமணி திடீரென உயிரிழந்தது எப்படி.. சட்டசபையில் விளக்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரது மரணம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
உயிரிழந்த தங்கமணியை பொறுத்தவரை விசாரணைக் கைதி எனக் கூறப்படும் நிலையில் அவர் நீதித் துறை நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டவர் என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் அளித்த விளக்கம் வருமாறு;

திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த 26-4-2022 அன்று வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதித் துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, அன்றையதினமே திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

கிளைச்சிறையில் அடைப்பு
இந்த நிலையில், சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7-40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8-40 மணியளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

நீதித்துறை நடுவர்
நேற்றிரவு, நீதித் துறையினுடைய நடுவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இரண்டு முறை
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முறை விசாரணைக் கைதிகளின் மரணம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்திருக்கிறார். சென்னையை சேர்ந்த விக்னேஷ் மரணம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி மரணம் ஆகிய இரண்டு விவகாரங்களையும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications