ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும்.. விழித்துவிட்ட தமிழனை இனி வீழ்த்திட முடியாது.. ஸ்டாலின் உறுதி!
சென்னை: ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை இனி வீழ்த்திட முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட தமிழர்களையும், தமிழ்நாட்டையும் முன்னிறுத்தி பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளான இன்று அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அரசியல் குரல்
''சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள். சாதியின் பெயரால் கல்வி - வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்.''

திராவிடா.. விழி
''தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம். ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது. திராவிடா.. விழி! எழு! நட!'' இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவில் கூறியிருக்கிறார்.

மகத்தான சாதனைகள்
நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது என்பது இதன் மூலம் கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றது நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்ற சென்னை மாகாணத்தில் தான் என்பதும் திரும்பிப் பார்க்கத் தக்கது.

பணியாளர் தேர்வு வாரியம்
எல்லாவற்றுக்கும் மேலாக நீதிக்கட்சி ஆட்சியில் தான் பணியாளர் தேர்வு வாரியம் தமிழகத்தில் 1924-இல் ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும், இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications