கம்யூனிசம் பேசும் ஊரில் கூட கை ரிக்ஷா இருக்குது! ஆனால் இங்கே! அது தான் கருணாநிதி! ஸ்டாலின் பெருமை!
சென்னை: கம்யூனிச சித்தாந்தத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் மேற்குவங்கத்தில் கூட இன்னும் மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா இருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் அது இல்லை என்றால் அதற்கு காரணம் கருணாநிதி தான் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கும் சூழலில், அவரது இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே வேருக்கு விழா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

ஒரு வருடம்
''பிறந்தநாள் கொண்டாடுவது என்பது அந்த பிறந்தநாளுக்குரிய நபர் என்றைக்குப் பிறந்தாரோ அந்த தேதியில் கொண்டாடுவதுதான் வழக்கம்.
ஆனால் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை, அதிலும் குறிப்பாக நம்முடைய சேகர்பாபு அவர்கள் ஒரு நாள் அல்ல; 30 நாள் - 40 நாள் - 50 நாள் - ஏன் அதிகபட்சம் அடுத்த பிறந்தநாள் வரும் வரைக்கும் ஒரு ஆண்டு அவர் கொண்டாடுவார்.''

மாதம் முழுவதும்
''ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று அவரிடத்தில் சொன்னால், அவர் ஒரு கூட்டம் அல்ல, மாதம் முழுவதும் கூட்டம் நடத்துவார். அப்படித்தான் நடத்திக்கொண்டிருக்கிறார். அதாவது ஒரு புத்தகத்தை வெளியிட வேண்டும் என்றால், ஒரு கூட்டம் நடத்தி - ஒரு விழா நடத்தி - அதில் அந்தப் புத்தகத்தை வெளியிடுவோம். ஆனால் ஒரு கூட்டம் நடத்துவதையே தேதி வாரியாக வெளியிட்டு - ஒரு புத்தகமாக வெளியிட்டு ஒரு கூட்டம் நடத்துபவர் யார் என்று கேட்டால், அது சேகர்பாபு தான்.''

எப்போது முடியும்?
''நேற்றைக்கு கலைஞருடைய பிறந்தநாள் விழா தொடங்கிவிட்டது. இது எப்போது முடியப்போகிறது என்று தெரியவில்லை. இன்றுகூட பத்திரிகைகளில் விளம்பரம் பார்த்திருப்பீர்கள். 'வேருக்கு விழா' - அதாவது தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கெல்லாம் வேராக இருந்து, அவர் இன்றைக்கு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்.''

கம்யூனிச சித்தாந்தம்
''நாம் இப்படிப்பட்ட பொறுப்புகளுக்கு வந்ததற்கு காரணம் யார் என்று கேட்டீர்கள் என்றால், இதோ இங்கு வீற்றிருக்கும் நீங்கள்தான். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், ஒவ்வொரு பிறந்தநாளையும் தலைவர் கலைஞர் அவர்கள் மக்களுக்காகப் பயன்படுத்தினார். இன்றைக்குக் கை ரிக்ஷாக்களை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது. கம்யூனிச சித்தாந்தத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் மேற்குவங்கம் - கல்கத்தாவில் கூட இன்று கை ரிக்ஷா இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கை ரிக்ஷா இல்லை என்றால் அதற்குக் காரணம் தலைவர் கலைஞர்.''












Click it and Unblock the Notifications