கொஞ்சும் போது கூட வேகமாக கொஞ்சுவார் நேரு! அதிகாரிகள் அவரிடம் கஷ்டப்படுகிறார்கள்! ஸ்டாலின் பேச்சு!
சென்னை: கொஞ்சும் போது கூட படபடவென வேகமாக தான் கொஞ்சுவார் அமைச்சர் கே.என்.நேரு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் அமைச்சர் நேருவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது தனக்குத் தான் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேயர் மற்றும் நகராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் நிறைவுரை ஆற்றிய அவர் இதனைக் கூறினார்.
முதல்வர் உரையின் விவரம் வருமாறு;

வேகமானவர் நேரு
ஆட்சி அமைந்துவிட்டது. அமைச்சர்கள் பட்டியல் தயாரித்து கொண்டு இருக்கிறோம். அப்போது நகராட்சி துறைக்கு நேரு அவர்களை தான் தேர்ந்தெடுத்தேன். ஏன் என்றால் அவர் எல்லாவற்றிலும் வேகமாக இருப்பார். மேடையிலே பார்த்திருப்பீர்கள். அதனால் தான் அவரை தேர்ந்தெடுத்து, இத்துறைக்கு அமைச்சராக நியமித்து இருக்கிறோம். இன்னும் வேடிக்கையாக சொல்ல வேண்டும் என்றால், அவர் மனைவியை கூட வேகமாக தான் கொஞ்சுவார். படபடவென ஸ்பீடாக இருப்பார். அதிகாரிகள் எல்லாம் அவரிடம் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்குத் தான் தெரியும். இந்த ஸ்பீடு இருக்கனும், அதனால் அவரை தேர்வு செய்தேன்.

அரசியல் அடிச்சுவடி
அவரே உள்ளாட்சிப் பிரதிநிதியாக அரசியல் களத்தில் காலடி வைத்தவர்தான். புள்ளம்பாடி ஊராட்சி தலைவராக. அங்கிருந்து தான் அவரது அரசியல் அடிச்சுவடி ஆரம்பம் ஆனது. என்னுடைய அரசியல் அடிச்சுவடி கூட மேயர், அதே உள்ளாட்சி அமைப்பு தான். எனவே, எங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் என்பது நன்றாகத் தெரியும்.மக்களுக்கு மிகச்சிறிய நன்மையைச் செய்தாலும், அது பெரிய பேரை வாங்கித் தரும்.

பெயரை கெடுத்துவிடும்
சிறிய தவறு செய்தாலும், அதுவும் பெயரை கெடுத்துவிடும்! அதை மறந்துவிடாதீர்கள். எனவேதான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது ஒவ்வொரு அடியையும் கவனத்தோடு வைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகமும் மாமன்ற நடவடிக்கைகளும் சிறந்து விளங்கிட மாநகராட்சிகளின் சட்டங்களையும், விதிமுறைகளையும் மாண்புமிகு மேயர்கள் அறிந்திருப்பது அவசியம்.

விதிமுறைப் புத்தகம்
விதிமுறைப் புத்தகத்தை தொடர்ந்து அவ்வப்போது நீங்கள் படிக்க வேண்டும். அதில் இருக்கின்ற முக்கியமானதை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் நிதி நிலைமை பற்றி உங்களுக்குத் தெரியும். எவ்வளவு கடனில் இருக்கிறோம், எவ்வளவு வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறோம். இது எல்லாம் அவ்வப்போது அரசின் சார்பில், நிதித்துறையின் சார்பில் சட்டமன்றத்தில் பேசப்பட்டு கொண்டு இருப்பது எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.

நிதி நிலைமை
எனவே, நிதிநிலைமைக்கு ஏற்றவாறுதான் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்ய முடியும். அப்படி ஒதுக்கீடு செய்யும் நிதி முறையாகச் செலவு செய்யப்பட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டத்தை கூட்டி, என்னென்ன பிரச்சனைகள் என்று பேசி தீர்த்து கொண்டீர்கள் என்றால், உடனடியாக நினைத்த நேரத்தில் அப்பணியை செய்து முடிக்க முடியும். ஆகவே, அதையும் பின்பற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே இந்த அரசுக்கும் நற்பெயரை பெற்றுத்தரக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்கி தர வேண்டும்.












Click it and Unblock the Notifications