முதல்வன் பட பாணியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு! அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது என்ன?
சென்னை: இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் பட பாணியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு நடத்திய விவகாரம் தான் காவல்துறை வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் ஆவடிக்கு அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் அம்பத்தூர் டி1 காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஆய்வுக்கு வரும் தகவல் சில நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே தெரிந்ததால் அந்தக் காவல் நிலைய காவலர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

அரசு விடுமுறை
புனித வெள்ளியான இன்று ஊரே விடுமுறையை கொண்டாடி ஓய்வில் நேரத்தை கழித்து வரும் வேளையில், முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம் போல் பரபரவென அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்றும் வீட்டை விட்டு காலையிலேயே புறப்பட்டுவிட்டார். திருவள்ளூர் மாவட்ட திருமுல்லைவாயல், ஆவடி பேருந்து நிலையம் அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த அவர் அதன்பிறகு சென்னை திரும்பினார்.

திடீர் ஆய்வு
அப்போது வரும் வழியில் அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வுக்கு சென்ற அவர், அங்கிருந்த ஃபைல்களை எடுத்துவரச் சொல்லி விவரம் கேட்டிருக்கிறார். காவல் நிலைய ஆய்வாளரும், காவலர்களும் காவல் நிலைய பதிவேடு மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார் விவரங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். பொறுமையுடன் அதை கவனித்து கேட்டுக்கொண்ட முதல்வர், புகார்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காவலர்கள் பதற்றம்
சினிமா பாணியில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடியாக இப்படி களமிறங்குவார் என்பதை சிறிதும் எதிர்பார்க்காத அம்பத்தூர் காவல் நிலைய காவலர்கள், முதல்வர் ஆய்வின் போது சற்று பதற்றத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், விரைந்து செயலாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட சில அட்வைஸ்களை அளித்துவிட்டு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார்.

காவல்துறை வட்டாரம்
அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்திய விவகாரம் தான் தமிழகம் தழுவிய அளவில் காவல் துறை வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது. காவல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தும் 2-வது திடீர் ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இதேபோல் பல திடீர் ஆய்வுகளை நடத்தி துறை ரீதியிலான பணிகளை, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications