ஷோ காட்டுபவர்கள் யார்..? உழைப்பவர்கள் யார்..? MLAக்களை தீவிரமாக கண்காணிக்கும் ஆட்சி மேலிடம்..!
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதை பற்றிய ரிப்போர்ட்டை ஆராயத் தொடங்கியுள்ளது ஆட்சி மேலிடம்.
தொகுதி மக்களுக்காக அர்ப்பணிப்போடு உழைப்பவர்கள் யார் மற்றும் எம்.எல்.ஏ.பதவியை வைத்துக்கொண்டு ஷோ காட்டுபவர்கள் யார் என்ற இரண்டு பட்டியல் தனிதனியாக தயாராகி வருகிறது.
இதனிடையே அடுத்த 5 ஆண்டுகளில் எப்படியும் அமைச்சரவையில் ஒருமுறையாவது இடம் பிடித்து விட வேண்டும் என நினைக்கும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் ஸ்டாலினின் நன்மதிப்பை பெறுவதற்காக தீவிர உழைப்பைச் செலுத்தி வருகின்றனர்.

தனிப்பெரும்பான்மை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி செய்து வருகிறது திமுக அரசு. இனி வரும் அடுத்தடுத்த தேர்தல்களிலும் திமுக தான் வெற்றிபெற வேண்டும் என விரும்பும் ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்களை அதற்கேற்றவாறு மக்கள் பணி ஆற்ற கட்டளையிட்டுள்ளார். சென்னையில் முகாமிடுவதை தவிர்த்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொகுதியிலேயே தங்கி மக்களுடன் தொடர்பில் இருக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறார்.

சென்னையில் முகாம்
ஆனால் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் தங்களை அமைச்சர்களாக மனதில் எண்ணிக்கொண்டு வாரத்தில் 4 நாட்கள் சென்னையில் தான் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ. சென்னை போயிருக்கிறார், ஊரில் இல்லை, என்ற பதில்கள் தமிழகத்தின் பல சட்டமன்றத் தொகுதி அலுவலகங்களில் கேட்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் தொகுதியிலேயே முழுமையாக முகாமிட்டு மக்களை காலையும், மாலையும் சந்திக்கும் ஒரு சில எம்.எல்.ஏ.க்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மந்தம்
இதனிடையே மந்தமாக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள், இதுவரை மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காத எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரத்தை தனியாக பிரித்தெடுக்க உள்ளது ஆட்சி மேலிடம். இதேபோல் ''எங்கள் ஊரில் ஒருவர் எங்க எம்.எல்.ஏ.'' என மக்களே கொண்டாடும் அளவும் செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் விவரத்தையும் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

இளம் எம்.எல்.ஏ.க்கள்
எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு தொடர்பான ஆய்வின் போது இளம் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சிட்டாய் பறந்து வேலை செய்கிறார்கள் என்ற தகவல் முதலமைச்சர் கவனத்துக்கு சென்றிருக்கிறது. வேட்பாளர் தேர்வின் போது சிபாரிசுகளை புறந்தள்ளி தனிப்பட்ட முறையில் ஸ்டாலினே பார்த்து பார்த்து புதுமுகங்களை வேட்பாளர்களாக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications