முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. எந்த பிரச்சனையும் இல்லை.. துரைமுருகன் அப்டேட்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அந்த பரிசோதனையின் முடிவில் இருதயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய துரைமுருகன், டிஸ்சார்ஜ் தொடர்பாக மருத்துவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 3 நாட்களுக்கு முன்பாக காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது முதல்வர் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின், மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இந்த பயணத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் அவரின் சொந்த வாகனத்திலேயே அமர்ந்து பயணித்தார். இதனால் கவலை கொள்ளும் அளவிற்கு ஸ்டாலினின் உடல்நிலை இல்லை என்பதால் திமுகவினர் நிம்மதி அடைந்தனர்.
அதன்பின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தவாறே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிகளை முதல்வர் மேற்கொண்டார். சாதாரண சட்டை மற்றும் கைலி அணிந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டது.
இதன்பின் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனை வரத் தொடங்கினர். விசிக தலைவர் திருமாவளவன் நேற்று மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் ஸ்டாலினை சந்திக்க அப்பல்லோ மருத்துவமனை வந்தார்.
ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் இருதயத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது தொடர்பாக மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதனால் முதல்வர் ஸ்டாலினின் டிஸ்சார்ஜ் தொடர்பாக விரைவில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications