”மேயர்” கனவில் கூட்டணி கட்சிகள்..அசைந்து கொடுக்காத திமுக-அதிமுக.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பரபர
சென்னை : தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேயர் பதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும், பிரதான கட்சிகளான திமுக அதிமுக இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்தாலும் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் மேயர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அதிமுக உள்ளிட்டவை கூடுதல் இடங்களில் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. பொங்கலுக்குப் பிறகு திமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துள்ளதாக அதிமுகவினர் கூறிவரும் நிலையில் சட்டமன்றத் தேர்தலைப் போலவே மாநகராட்சிகளில் கைப்பற்றி தங்கள் பலத்தை நிரூபிக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது.

கூட்டணி கட்சிகள் கோரிக்கை
குறிப்பாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திமுக கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டி வரும் நிலையில் திமுகவும் தாங்களும் பலமுள்ள எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் பெரும்பாலான மாநகராட்சி நகராட்சிகளில் கைப்பற்றி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் மாநகராட்சி வார்டுகளில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெற முயன்று வருகின்றன.

மேயர் பதவி
குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவை தங்களுக்கு ஏதாவது ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை ஒதுக்க வேண்டும் என திமுக அதிமுகவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாநகராட்சிகளில் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என திமுக அதிமுக திட்டமிட்டு பணியாற்றி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளின் இந்த திடீர் கோரிக்கை அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வளமும் கூடுதல் வலு சேர்க்கும் என்பதால் அவர்களுக்கு நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பதவிகளை பெறலாம் என பிரதான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதேநேரத்தில் மாநகராட்சிகளில் தனிப்பெரும்பான்மை பெற்றால்தான் மேயர் பதவியில் அமர முடியும் என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவிலான இடங்களை ஒதுக்கிவிட்டு கூடுதல் இடங்களில் போட்டியிட்டால் தான் பெரும்பான்மை பெற முடியும் என்பதால் கூட்டணி கட்சிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications