கோவை கோவிலில் கேட்ட குறட்டை சத்தம்.. திறந்து பார்த்து ஆடிப்போன பூசாரி.. திரண்ட ஊர் மக்கள்
கோவை: கோவையில் உள்ள கோவைப்புதூரில் பாலவிநாயகர் கோவில் இருக்கிறது. அந்த பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது. அங்கு உண்டியலை உடைத்து பணத்தை திருடிய திருடன், அசதியில் அங்கேயே தூங்கியது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அவரை எழுப்பி போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள்
கோவையின் புறநகர் பகுதியான கோவைப்புதூரில் கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. ஏராளமான மாணவர்கள் அந்த பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் தங்கி படிக்கிறார்கள். கோவை புதூரில் பாலவிநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். நேற்று முன்தினம் காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்திருக்கிறார் அப்போது கோவில் கதவு திறந்து கிடந்திருக்கிறது.

உண்டியல் உடைப்பு
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி, கோவிலுக்குள் சென்றபோது அங்கு இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார். உண்டியலில் இருந்த பணம் மொத்தமும் திருடப்பட்டிருந்தது. உண்டியல் காலியாக இருந்தது. இதனிடையே உண்டியல் அருகிலேயே ஒருவர் படுத்து குறட்டை விட்டபடி நன்றாக தூங்கிக்கொண்டிருந்ததை பூசாரி கண்டார்.
குறட்டை விட்ட திருடன்
இதையடுத்து பூசாரி உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பலரும் வந்தார்கள். பின்னர் அவர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்தவரை தட்டி எழுப்பி விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.
கோவிலில் திருட்டு
அப்போது அவர் கூறிய தகவல் தான் மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கோவிலில் பணம் திருட வந்ததாகவும் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பின்னர், அதன் அருகே அசதியில் நன்றாக படுத்து உறங்கி விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அந்த நபரை பிடித்து கோவை குனியமுத்தூர் போலீஸை அழைத்து ஒப்படைத்தனர்.
துரத்திவிட்ட புதுச்சேரி போலீஸ்
போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த 42 சின்னையன் என்பதும், அவர் மீது ஏராளமான திருட்டு வழக்கு இருப்பதும்,அவரை அந்த மாநிலத்தைவிட்டு போலீசார் வெளியே அனுப்பியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, கோவை வந்த அவர் கோவைப்புதூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்துள்ளாராம்.
மழை வந்தது
ஒரு கட்டத்தில் பழையபடி திருட முடிவு செய்தாராம். அதன்படியே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும், வெளியே வந்தபோது மழை பெய்ததால் கோவிலுக்குள் காத்திருந்த போது, அசந்து தூங்கிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சின்னையனை கைது செய்ததுடன், அவர் உண்டியலை உடைத்து திருடிய ரூ.8,250-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications