சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவனை.. உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
சென்னை: சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மே மாதம் 23 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.வி.கங்காபூர்வாலா ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24 இல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் ஆகிய இருவர் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன குழுவான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
ஆர் மகாதேவன் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 1989-ம் ஆண்டு வழக்கறிஞராக இவர் பதிவு செய்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் வாதாடியுள்ளார்.
தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் ஆயிரக்கணக்கான வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications