ஏதும் மர்மம் இருக்கா? குரோர்பதில கேக்குற 20வது கேள்விய கேக்குறீங்களே! அசைந்து கொடுக்காத ஆறுமுகசாமி!
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்மமான மரணம் அடைந்ததாக சொல்லப்பட்ட நிலையில், ஆணைய விசாரணையில் மர்மம் ஏதேனும் கண்டறிந்தீர்களா ? அப்படி ஏதும் மர்மம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கோன் பனேகா குரோர்பதியில் கேட்பது போல்
20ஆவது கேள்வி மாதிரி கேக்குறீங்க அதெல்லாம் அறிக்கையிலதான் சொல்ல முடியும் என விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி கூறியுள்ளார்.
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 2016 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீன்வேஸ் ஆலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக நீண்ட காலமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். இதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது
ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதில் எந்த குளறுபடியும் இல்லை: ஆறுமுகசாமி
ஜெயலலிதா மரணம்
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர்கள் செவிலியர்கள் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா புகார் அளித்த ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் இடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.
ஆறுமுகசாமி ஆணையம்
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது தற்போது விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் இன்று ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி இன்று தமிழக அரசிடம் தாக்கல் செய்தார். 2017ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில்,1,798 நாட்களுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மர்மம் உள்ளதா?
அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்மமான மரணம் அடைந்ததாக சொல்லப்பட்ட நிலையில், ஆணைய விசாரணையில் மர்மம் ஏதேனும் கண்டறிந்தீர்களா ? அப்படி ஏதும் மர்மம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கோன் பனேகா குரோர்பதியில் கேட்பது போல் 20ஆவது கேள்வி மாதிரி கேக்குறீங்க அதெல்லாம் அறிக்கையிலதான் சொல்ல முடியும் என விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி கூறியுள்ளார்.
சந்தேகப்படுகிறதா ?
மேலும்,"ஜெயலலிதா மரணத்தில் ஆணையம் யாரையாவது சந்தேகப்படுகிறதா ? என்ற கேள்விக்கு அதுதான் ரிப்போர்டு. அதுல சொல்லிருக்கேன் சந்தேகமா இல்லையான்னு' என பதிலளித்ததோடு, 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கால தாமதம் செய்யவில்லை; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் மட்டுமல்லாது அதற்கு முன்பும் இருந்த நிலை பற்றியும் விசாரிக்கப்பட்டது என்றார்.
அமைச்சரவையில் விவாதம்
"ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதில் எவ்வித சந்தேகமுமில்லை ஓபிஎஸ் வாக்குமூலம் அறிக்கைக்கு உதவியாக இருந்தது" எனவும் ஆறுமுகசாமி கூறினார். இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த இந்த அறிக்கை வருகின்ற 29ஆம் தேதி நடைபெற இருக்கின்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒரு பொருளாக வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.