ராகுல்காந்திக்கு சிறைத்தண்டனை! காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் சாலை மறியல் போராட்டம்!
சென்னை: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வெளியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராகுல்காந்தி
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னையில் சட்டசபைக்கு வெளியே சாலையில் அமர்ந்து கருப்பு பேட்ஜுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

செல்வப்பெருந்தகை
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கடுமையான முழக்கங்களை முன் வைத்தனர். இதனிடையே சட்டசபை வளாகத்தில் பேட்டியளித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் பேச்சுரிமையையும், எழுத்துரிமையையும் பாஜக அரசு பறிக்கக் கூடாது எனவும் கூறினார். மேலும், மத்திய அரசுக்கு எதிராக உரத்த குரலில் முழக்கங்களையும் எழுப்பினார்.

கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று கும்பகோணம் சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு சென்ற அவர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும்
இதனிடையே மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டத்தில் குதித்தனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications