உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி- 'கராத்தே' கலகக் குரலுக்கு காங்-ல் குவியும் ஆதரவு!
சென்னை; உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட வேண்டும் என குரல் எழுப்பியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸை தூக்கி சுமக்க தயாராக இல்லை திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் நேரு பேச கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

கராத்தே சஸ்பெண்ட்
இந்த விவகாரம் குறித்து கே.என். நேருவும் கராத்தே தியாகராஜனும் விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால் திடீரென கராத்தே தியாகராஜனை காங்கிரஸ் மேலிடம் சஸ்பெண்ட் செய்தது.

குவியும் ஆதரவு
இதனைத் தொடர்ந்து கராத்தே தியாகராஜனை தொடர்பு கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ப.சிதம்பரத்துடன் சந்திப்பு
இந்த தெம்பில்தான் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்திக்க சென்றார் கராத்தே. ஆனால் ரஜினி கட்சிக்கு தாவப் போகும் கராத்தேவுக்கு இனியும் ஆதரவு தருவதில்லை என்ற முடிவில் இருக்கிறார் ப.சிதம்பரம்.

கை கழுவிய ப.சிதம்பரம்
அதனால்தான் கராத்தேவை கை கழுவும் வகையில் அவரது கருத்துடன் தமக்கு அறவே உடன்பாடு இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டாராம் ப.சிதம்பரம். காங்கிரஸில் தமக்கான ஆதரவாளர்களை அதிகரித்து அப்படியே ரஜினி கட்சியில் இணைந்துவிடும் திட்டத்தில் இருக்கிறாராம் கராத்தே.












Click it and Unblock the Notifications