சூர்யாவுக்கு நெகிழ்ந்து நன்றி சொன்ன திருமாவளவன்...பொறுமை, சகிப்பு போராளிக்கு கவசம் என வாழ்த்து
ஜெய் பீம் சர்ச்சை பெரிதாகி வரும் நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஜெய் பீம் படம் பார்த்து தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் விசிக தலைவர் திருமாவளவன், அதற்கு சூர்யா நன்றி தெரிவித்திருந்தார். அதற்கு நெகிழ்ந்து பதிலளித்துள்ள திருமாவளவன் நன்றி மடல் விடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. பொறுமையும் சகிப்புத்தன்மையும் தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள் என வாழ்த்தியுள்ளார்.
'ஜெய் பீம்' படத்தில் வன்னியர்களுக்கு எதிராக காட்சி அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட அவதூறை நீக்க காட்சிகளை நீக்கி ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு என நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதிர்வலை ஏற்படுத்திய ஜெய்பீம்
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய்பீம் படம் மிகப்பெரிய அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இருளர் இன மக்களுக்கு எதிராக போலீஸ் நடத்திய வன்முறை வெறியாட்டத்துக்கு எதிராக முன்னாள் நீதிபதி சந்துரு இலவசமாக வழக்காடி நியாயம் கிடைக்கச் செய்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்பதால் பெரும் வரவேற்பை உலகெங்கிலும் படம் பெற்றுள்ளது.
முதல்வர் முதல் அரசியல் கட்சித்தலைவர்கள் பாராட்டு
படத்தை பார்த்து அதிர்ந்துப்போனேன், 1976 ஆம் ஆண்டு மிசாக்கால கொடுமைகள் என் மனதில் நிழலாடியது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டியது படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்பாயிண்டாக அமைந்தது. தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் படத்தை பாராட்டியுள்ளனர்.
வன்னியருக்கு எதிராக காட்சி அமைப்பா?
படத்தில் வரும் கொடுமைக்கார எஸ்.ஐ குருமூர்த்தியை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக காட்சிப்படுத்தும் விதத்தில் அவரது வீட்டில் காலண்டர் காட்சி இருந்ததாக வன்னியர் சமூகத்தினர் சமூக வலைதளங்களில் கண்டனம் எழுப்பினர். நிஜ வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. அந்தோணிசாமி தலித் கிருத்துவர் என்று இருக்கும்போது வலுக்கட்டாயமாக இக்காட்சியை வன்னியருக்கு எதிராக வைக்கும் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.
சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்-சூர்யா பதில்
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சூர்யாவும் பதிலுக்கு விளக்கம் அளித்திருந்தார். படத்தில் வரும் அக்காட்சியும் மாற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து இப்பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது, சூர்யாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு என வடமாநில பாணியில் வன்னியர் சங்கத்தை சேர்ந்த சிலர் அறிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சங்கம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்
இந்நிலையில் வன்னியர் சங்கம் சார்பில் ரூ 5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருமாவளவன் வாழ்த்தும் சூர்யாவின் நன்றியும்
இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம், 'கலைநாயகன்' சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வுடன்கூடிய தொண்டுள்ளத்தை, தொழிலறத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம் என திருமாவளவன் பாராட்டி பெரிய கடித்தையும் எழுதியிருந்தார். அதற்கு சூர்யா நன்றி தெரிவித்து பதிலளித்திருந்தார்.
சூர்யா நன்றி கடிதம்
சூர்யா கடிதம்
''பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி'' எனக் குறிப்பிட்டு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்திருந்தார்.
நெகிழ்ந்துப்போன திருமாவளவன்
திருமாவளவன் நன்றி
இந்நிலையில் அவரது நன்றிக்கடிதத்தால் நெகிழ்ந்த திருமாவளவன் அவருக்கு பதிலுக்கு வாழ்த்துச் சொல்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பழங்குடியின உரிமைப் போராளி பிர்சா முண்டா பிறந்த நாளில் இவ்வாறு பதிவிட்டுருப்பதற்கு வாழ்த்துகள் என பதிவிட்டுருந்தார்.
திருமாவளவனின் ட்விட்டர் பதிவு
திருமா வாழ்த்து
"கலைநாயகன்_சூர்யா அவர்கள், பழங்குடியினரின் உரிமைப்போராளி #BirsaMunda பிறந்தநாளில் எமக்கு நன்றி மடல் விடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. பொறுமையும் சகிப்புத்தன்மையும் தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள். #போராளி_சூர்யாவுக்கு எமது வாழ்த்துகள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
அரசியலாக்கப்படுகிறதா ஜெய் பீம்
தற்போது ஜெய் பீம் படத்தை அரசியல் கட்சிகள் கையிலெடுத்து மாறி மாறி வாழ்த்துவது அது அரசியலாக்கப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒருபுறம் வன்னியர் சங்கம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ், மறுபுறம் திருமாவளவன் உள்ளிட்டோர் வாழ்த்து என ஜெய்பீமுக்கான விளம்பரம் கூடித்தான் வருகிறது.












Click it and Unblock the Notifications