“ப்ரஸ் மீட்” வேணாம்.. மோடி வழியை பின்பற்றினால் அண்ணாமலைக்கு “நல்லது” - கலாய்த்த கே.எஸ்.அழகிரி
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையால் பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள முடியாவிட்டால் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அவரது எதிர்காலத்துக்கு நல்லது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
“குரங்கு, நாய்”.. வாயைவிட்ட அண்ணாமலை! “ஆக்ஷன்” எடுப்போம்.. மீடியாக்கள் புறக்கணிக்கனும் - சிஎம்பிசி
குரங்குகள்
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் மைக்குகளுடன் அண்ணாமலை அருகே சென்று பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அவர்களை நோக்கி அண்ணாமலை ஆவேசமாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. "மரத்தின் மேல் குரங்கு தாவுவதைபோல் சுற்றி சுற்றி வருகிறீர்களே.
நாய்.. பேய்
சாப்பிட செல்லும்போது நான் என்ன சொன்னேன்? மரியாதையாக நின்று நீங்கள் எல்லாம் சாப்பிடுங்கள் என்று சொன்னேனா? ஊரில் நாய், பேய், சாராயம் விற்பவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பீர்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்கள்" என்று காட்டமாக சொல்லிவிட்டு சென்றார்.
பத்திரிகையாளர்கள் கண்டனம்
அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாமலை பத்திரிகையாளர்களை நோக்கி ஆவேசமாக பேசிவிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் அண்ணாமலையின் நடத்தைக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
கே.எஸ்.அழகிரி கண்டனம்
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பத்திரிக்கையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
மோடி வழியில்
அப்படி நடந்து கொள்ள முடியவில்லை என்றால் அவரது தலைவர் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக் கொள்வது அண்ணாமலையின் எதிர்கால அரசியலுக்கு நல்லது." என்று தனது விமர்சனத்தை ட்விட்டரில் அவர் பதிவு செய்து இருக்கிறார்.
அலுவல் மொழி கூட்டம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டன. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின்
அமித்ஷா குழுவின் பரிந்துரையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.
மூர்க்கத்தனம்
அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும்." என குறிப்பிட்டு இருந்தார்.
தீர்மானம்
திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய அரசின் இந்தித்திணிப்பு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நவம்பர் 4 ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என திமுக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.