கும்பகோணம் மேயர் வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநர் சரவணன் போட்டி- காங். அதிரடி அறிவிப்பு!
சென்னை: கும்பகோணம் மேயர் பதவிக்கான வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநரான சரவணன் போட்டியிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
கும்பகோணம் 156 ஆண்டுகால நகராட்சி என்ற வரலாற்றைக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1866-ம் ஆண்டு கும்பகோணம் நகராட்சியாக உதயமானது. 1949-ல் முதல்நிலை நகராட்சி; 1974-ல் தேர்வு நிலை நகராட்சி என தரம் உயர்த்தப்பட்டது.

யார் யார்?
கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் கும்பகோணம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. கடந்த முறை அதிமுக வசம் கும்பகோணம் நகராட்சி இருந்தது. கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் திமுக 39 இடங்களில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனித நேயமக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தில் உதயசூரியனில் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் சிபிஎம் கட்சி 2 இடங்களிலும் போட்டியிட்டன. அதிமுக 47 இடங்களிலும், தமாகா ஒரு இடத்திலும் போட்டியிட்டன,.

யாருக்கு எத்தனை இடங்கள்?
இத்தேர்தலில் திமுக 37 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 2, சிபிஎம் 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, விடுதலை சிறுத்தைகள் 1, அதிமுக 3, சுயேட்சைகள் 3 என வெற்றி பெற்றனர். திமுகவினர் அதிக இடங்களில் வென்றதால் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி திமுகவுக்கே என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். திமுவின் சு.ப.தமிழழகன், அசோக்குமார், தெட்சிணாமூர்த்தி ஆகியோர் மேயர் பதவிக்கான காய்களை நகர்த்தியும் வந்தனர். இந்த 3 பேரில் ஒருவருக்குதான் மேயர் பதவி என எதிர்பார்ப்பு நிலவியது.

காங். இன்ப அதிர்ச்சி
இந்நிலையில் திடீரென கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமை அறிவித்தது. 3 சீட் வாங்கி 2 இடங்களில் ஜெயித்த நிலையில் ஒரு மாநகராட்சி மேயர் பதவியையே திமுக தலைமை அள்ளி தந்ததால் காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனது. ஆனால் திமுக தலைமையின் இந்த அறிவிப்பு அக்கட்சியின் வார்டு கவுன்சிலர்களை திடுக்கிட வைத்தது. தங்களது குமுறலை கட்சி மேலிடம் தெரிவித்தும் வருகின்றனர் திமுக நிர்வாகிகள்.

காங். வேட்பாளர் அறிவிப்பு- திமுக கொந்தளிப்பு
இதனிடையே மேயர் வேட்பாளராக சரவணன் போட்டியிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரான சரவணன் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக உள்ள சரவணனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு திமுகவினரை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது. கும்பகோணம் மேயர் பதவியை அவ்வளவு எளிதாக திமுக கவுன்சிலர்கள் விட்டுத் தர மாட்டார்கள் என்றே அப்பகுதியினர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications