தவெக கொடுத்த வரலாற்று வாய்ப்பு.. 59 வருடங்களுக்கு பிறகு கைக்கு வந்த சான்ஸை தவறவிட்ட காங்கிரஸ்
சென்னை: வாய்ப்பு சில நேரங்களில் நமக்கு வந்திருக்கும்..அந்த வாய்ப்பை தவறவிட்டால் அடுத்த வாய்ப்பு வராமலேயே போகலாம் என்பது தான் எதார்த்தம்.. அப்படியான அபூர்வமான வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு 2026 தேர்தலில் அமைந்தது. ராகுல் காந்தி கூட தவெக உடன் கூட்டணி சேர ஆர்வம் காட்டினார். ஆனால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மறுத்தனர். இப்படி த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்காததால், சுமார் 59 ஆண்டு கால வரலாற்றுத் திருப்பத்தை காங்கிரஸ் கட்சி தவறவிட்டதாக பார்க்கப்படுகிறது
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1967ம் ஆண்டுக்கு பின்னர், அதாவது சுதந்திரம் அடைந்த முதல் 20 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி இல்லை. காங்கிரஸ் ஆட்சி 1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணாத்துரை தலைமையிலான தி.மு.க.வால் முடிவுக்கு வந்தது. 1967ல் தொடங்கி 76 வரை திமுக ஆட்சியில் இருந்தது. நெருக்கடி நிலைக்கு பிறகு திமுகவில் இருந்துபிரிந்து வந்த அதிமுக ஆட்சியைபிடித்தது. 12 ஆண்டுகள் அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. எம்ஜிஆர் 1977 முதல் 1987 வரை முதல்வராக இருந்தார். 1989 முதல் 1991 வரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் திமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் காங்கிரஸ் அரசால் கலைக்கப்பட்டது.

1991ல் மீண்டும் அதிமுக வந்தது. அப்போது ஜெயலலிதா முதல்வரானார். 1996ல் திமுக, 2001ல் அதிமுக, 2006ல் திமுக, 2011 முதல் 2021 வரை அதிமுக, 2021 முதல் 2026 வரை திமுக என திராவிட கட்சிகளே ஆண்டு வந்துள்ளன. 1967க்கு பிறகு இன்று வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிவரும் காங்கிரஸ் கட்சி இதுவரை தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்ததால் தனித்துவத்தையே இழந்தது.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் கரைந்து வந்த காங்கிரஸின் வளர்ச்சிக்கு த.வெ.க. உதவ தயாராக இருந்தது. ஆனால், த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி விரும்பிய போதிலும், அந்த கூட்டணியை அமைக்க தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் விரும்பவில்லை.. த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தங்கள் கட்சியை மீண்டும் புதுப்பொலிவு பெறச் செய்யலாம் என்று மாணிக்கம் தாகூர், வேலுச்சாமி எதிர்பார்த்தனர். ஆனால் அமையவில்லை. இதுபற்றி கருத்து தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களின் சுயநலத்தால் தவெக உடன் கூட்டணி அமையாமல் போய்விட்டதாக கவலை தெரிவித்துள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி விரும்பியடி ஒருவேளை த.வெ.க. காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால், ராகுல்காந்தியும், விஜய்யும் தமிழகத்தில் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால் த.வெ.க. சுமார் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியும் சுமார் 60 முதல் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகிறார்கள். அப்படி வென்றிருந்தால் துணை முதல்வர் பதவியும் கிடைத்திருக்கும். இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சி 59 ஆண்டு காலத்திற்குப் பிறகு காங்கிரசுக்கு கிடைக்க இருந்த ஒரு பெரும் வரலாற்றுத் திருப்பத்தை காங்கிரஸ் கட்சி தவறவிட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் சிலர் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications