உண்ணாவிரதம் எப்போது முடியும்? சசிகாந்த் செந்தில் சொன்ன பதில்.. மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
சென்னை: தமிழகத்திற்கான கல்வி நிதி விடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருக்கிறார். 4வது நாட்களாக உண்ணாவிரதம் தொடர்ந்திருக்கும் நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் உண்ணாவிரதம் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அவர் விளக்கமளித்திருக்கிறார்.
மழலையர் பள்ளி முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வது, சமத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம், எந்தவொரு குழந்தையும் கல்வி கற்பதில் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும், குறிப்பாக கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்வது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை கொண்டு கடந்த 2018ம் ஆண்டு சமக்ரா ஷிக்ஷா அபியான் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கான நிதியும் வழங்கப்படுகிறது. அதாவது தனியார் பள்ளியில் 25% ஏழை எளிய மாணவர்களை சேர்க்க மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் நிதி சமக்ரா ஷிக்ஷா அபியான் கல்வி திட்டத்தின் மூலம்தான் வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் இந்த நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு கூறியதால், தனியார் பள்ளியில் 25% ஏழை எளிய மாணவர்கள் சேர்க்கையை நடத்த முடியாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே இந்த நிதியை விடுவிக்க கோரி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
போராட்டம் 4வது நாளாக நடைபெற்று வருகிறது. உணவு எடுத்துக்கொள்ளாததால் சசிகாந்த் செந்திலின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். திமுக தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இது குறித்து சசிகாந்த் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னிடம் அறிவுறுத்தியுள்ளனர். தேசிய தலைவர்களுடன் ஆலோசித்து முடிவை எடுப்பேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications