மிக எளிய குடும்ப பின்னணி கொண்ட யசோதா... காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக உருவான பின்னணி..!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த யசோதா இன்று காலமானார். அவருக்கு வயது 75.
காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் மூன்று நாட்களுக்கு முன்னர் பங்கேற்ற அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வசதியில்லை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த யசோதா ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் அறக்கட்டளை தலைவர் என உயர்ந்த இடத்துக்கு வந்தவர். வறுமையில் தனது பள்ளிப்பருவத்தை கடந்த யசோதா, 70-களில் ரமணி பாய் என்ற மிகப்பெரிய காங்கிரஸ் பெண் சொற்பொழிவாளருடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்குகிறார்.

5 நிமிடம் வாய்ப்பு
ரமணிபாய் பொதுக்கூட்டங்களில் பேசச்செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே யசோதாவும் செல்கிறார். இப்படி தன்னுடனே பயணித்து வரும் யசோதாவுக்கு தாம் பேசும் கூட்டங்களில் 5 நிமிடம் உரையாற்றும் வாய்ப்பை ரமணிபாய் ஒரு பொதுக்கூட்டத்தில் பெற்றுக்கொடுக்கிறார். அந்த வாய்ப்பை மிக கெட்டியாக பிடித்துக்கொண்ட யசோதா மேடையில் இருப்பவர்கள் வியக்கும் அளவுக்கு பேசுகிறார்.

கட்சிக்காக பேச்சு
காங்கிரஸ் கட்சிக்காக அடிவயிற்றில் இருந்து உரத்த குரல் எழுப்பி மேடைதோறும் பின்னாளில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் கர்ஜிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் ரமணிபாய் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஜனதா கட்சிக்கு செல்ல, யசோதா காங்கிரஸ்லேயே தங்கிவிட்டார். இடத்துக்கு ஏற்றவாறு மக்களிடம் பேசுவதில் திறமையானவர் யசோதா. நகர மக்கள் மத்தியில் என்ன பேசினால் எடுபடுமோ அதை நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும், கிராமப்பகுதிகளில் என்ன பேசினால் மக்கள் ஈர்க்கப்படுவார்களோ அதை கிராமங்களிலும் அந்தக் காலத்திலேயே எந்த வியூக வகுப்பாளர்களும் இல்லாமல் பிரித்து பேசக்கூடியவர் யசோதா.

4 முறை எம்.எல்.ஏ.
பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு முதல்முறையாக 1980-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வாய்ப்பு கொடுத்தது காங்கிரஸ். அந்த தேர்தலில் வெற்றிபெற்ற இவர், அடுத்தடுத்து 1984, 2001, 2006 என மொத்தம் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்துக்கு சென்றார். இதுமட்டுமல்லாமல் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக யசோதா செயலாற்றி இருக்கிறார். சட்டமன்றத்தில் எதையும் மிக நயமாக பேசக்கூடியவர் யசோதா என்பதால் இவர் பேசுகிறார் என்றால் அவை அதை கவனிக்கத் தவறாது.

வசதியில்லை
இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட யசோதா தனக்கென்றோ, தனது குடும்பத்திற்கோ பெரிதாக எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை. வசதி வாய்ப்பு இருந்திருந்தால் அவர் ஏன் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்க போகிறார். இதனிடையே யசோதாவை பற்றி குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அவரது தைரியத்தை கூறலாம். இல்லையென்றால் இவ்வளவு தூரம் அரசியலில் அவர் பயணித்திருக்க வாய்ப்பில்லை.












Click it and Unblock the Notifications