திமுக கறார்.. காங்கிரஸ் கேட்கும் தொகுதியை தூக்கி தர ரெடியில்லை.. டெல்லி பறக்கும் செல்வப் பெருந்தகை
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 9 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திமுகவுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று டெல்லி செல்கிறார்.
தேசிய அளவில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி சுமூகமான தொகுதி உடன்பாடு மேற்கொண்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. இதனால் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். லோக்சபா தேர்தலில் 15 முதல் 21 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாக முதலில் தகவல் வெளியாகின. ஆனால் 21 தொகுதிகளை எல்லாம் கேட்கவில்லை என காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்தது. கடந்த 13-ந் தேதியே திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போதுதான் திமுகவில் ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு மிக அதிகபட்சமாக 9 தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வந்துள்ளது. காங்கிரஸ் மேலிடம் நெருக்கடி கொடுத்தால் 9 + புதுச்சேரி என 10 தொகுதிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடாம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஆகக் கூடுமானவை தமிழ்நாட்டில் டபுள் டிஜிட் இடங்களைப் பெற்றுவிட முடியாதா? என போராடுகிறதாம்.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப் பெருந்தகை இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி மற்றும் மேலிட பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் செல்வப் பெருந்தகை. இந்த சந்திப்புகளில் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கான தொகுதிகள், தொகுதி பங்கீடு கையெழுத்து உள்ளிட்டவை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications