5 தொகுதிகள் அடங்கிய பட்டியல்... திமுகவிடம் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கொடுத்த லிஸ்ட்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் ஹார்ட் பீட் கடந்த 2 நாட்களாகவே அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் சீட் கிடைக்குமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு சென்றுவிடுமா என விருப்பமனு கொடுத்த அனைவரும் ஏக எதிர்பார்ப்பில் இருப்பது தான்.

இதனிடையே திமுகவிடம் 5 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி அதில் 3 தொகுதிகளை கேட்டிருக்கிறது.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திமுகவிடம் கொடுத்த 5 தொகுதிகளின் பட்டியல் இது தான். பொள்ளாச்சி, திருச்செங்கோடு, பெருந்துறை, அரவக்குறிச்சி, ஈரோடு மேற்கு என 5 தொகுதிகளில் ஏதேனும் 3-ஐ ஒதுக்கீடு செய்யுமாறு கொங்கு ஈஸ்வரன் ஸ்டாலினிடம் கேட்டிருக்கிறார். இந்த பட்டியலில் உள்ள பெருந்துறையை பொறுத்தவரை காங்கிரஸும் கேட்கிறது.
பெருந்துறையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் போட்டியிட விரும்பி விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார். இதற்காக அந்த தொகுதியை காங்கிரஸ் கேட்டு வரும் சூழலில் கொ.ம.தே.க.வும் கேட்கிறது.
இதேபோல் பொள்ளாச்சி தொகுதி இந்த முறை திமுகவுக்கு சாதகமாக கருதப்படுவதால் அங்கு மாவட்டச் செயலாளரான தென்றல் செல்வராஜை களமிறக்க திமுக தலைமை திட்டமிட்ட நிலையில் அதனையும் கொ.ம.தே.க. கேட்டிருக்கிறது.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கொடுத்த 5 தொகுதிகள் அடங்கிய பட்டியலில் எந்த 3 தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து செந்தில்பாலாஜி இந்தமுறை போட்டியிட உள்ளதால் அரவக்குறிச்சி தொகுதியை கொ.ம.தே.க. கேட்கிறது.
அந்த தொகுதியில் சிறுபான்மையினர் அதிகம் உள்ளதால் அதனை காரணம் காட்டி காங்கிரசும் அரவக்குறிச்சி தொகுதியை எதிர்பார்க்கிறது.












Click it and Unblock the Notifications