கே.பி.பார்க் : சேதாரமான குடியிருப்புகளை சரி செய்து தருகிறோம்... ஐகோர்ட்டில் கட்டுமான நிறுவனம் உறுதி
சென்னை: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை தரமற்ற முறையில் கட்டியதாகக் கூறி, கட்டுமான நிறுவனத்திற்கு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேதாரம் அடைந்த வீடுகளில் 93 சதவீதம் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள குடியிருப்புகளை விரைவில் சரி செய்து தருவதாகவும் கட்டுமான நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மீதமுள்ள வீடுகளை சரி செய்வதற்காக கட்டுமான நிறுவனத்துக்கு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
விலை உயர்ந்த செல்போன் வாங்க... குழந்தையை கடத்திய மாணவர் கைது... சிசிடிவியில் சிக்கினார்
கே.பி.பார்க் வீடுகள் சேதம்
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016-ல் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் சுவர்கள் பலவீனமாக இருப்பதாகவும், கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து இருந்ததும் அந்த வீடியோவில் தெரியவந்தது. இதையடுத்து குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் கே.பி.பார்க் குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
ஐஐடி, க்யூப் நிறுவனம் ஆய்வு
சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழுவினர், க்யூப் என்ற நிறுவனத் நிபுணர்களுடன் சேர்ந்து கே.பி.பார்க் கட்டிடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் க்யூப் நிறுவன குழுவினர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வுட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கையை இரண்டு கட்டங்களாக சமர்ப்பித்தனர். க்யூப் நிறுவனம் அறிக்கையில் கே.பி.பார்க் கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு வேலை மோசமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்டிடத்தின் தேவையான சிமெண்டின் அளவு 70% குறைவாக இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி குடியிருப்பில் டைல்ஸ் கற்கள் சரியாக பொருத்தப்படவில்லை. பம்ப் மோட்டார்கள், மீட்டர் போர்டுகள் மற்றும் மின்சார இணைப்பு சாதனங்களிலும் குறைபாடு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ்
மேலும் தரமற்ற வகையில் குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது எனவும் ஐஐடி நிபுணர் அறிக்கை அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பி எஸ் டி நிறுவனத்துக்கு எதிராக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏன் தடை பட்டியலில் சேர்க்கக் கூடாது என விளக்கம் அளிக்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
வழக்கு ஜனவரி 6க்கு ஒத்திவைப்பு
இந்த நோட்டீசை எதிர்த்து பி.எஸ்.டி. நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, குடியிருப்புக்களை சரி செய்து தருவதாகவும், 93 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்த்து பணிகள் மேற்கொள்ள தடை விதித்தால் அது சீரமைப்புப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்து விடும் எனக் கூறி, அந்நிறுவனத்திற்கு எதிரான நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 6 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.