நட்டா வந்த நேரம்.. நடுங்கும் தமிழகம்! ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்களின் வீடுகள் மீது தொடரும் அட்டாக்
செங்கல்பட்டு: தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் சீதாராமன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாம்பரம் பகுதி சங்சாலக் மாவட்ட தலைவராக இருக்கிறார்.
இந்த நிலையில் நள்ளிரவு வீட்டின் வெளியே பலத்த சத்தம் கேட்டதை அடுத்து சீதாராமன் வெளியே வந்து பார்த்து இருக்கிறார். அப்போது அங்கு பெட்ரொல் குண்டு வீசப்பட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சிசிடிவி காட்சி
இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் இருவர் சீதாராமன் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி கையில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை பற்ற வைத்து வீட்டினுள் வீசினர்.

போலீஸ் விசாரணை
அதே வேகத்தில் இருவரும் பைக்கில் அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்துமாறு ஆணையிட்டுள்ளார்.

கோவையில் அட்டாக்
இதேபோல் நேற்று இரவு கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக - கேரள பொருப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கோவை பாஜக அலுவலகத்தில் நேற்று முந்தினம் இதேபோல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார் எரிப்பு
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் சிவசங்கர் என்பவரது காரும் எரிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியிலும் பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் செந்தில்பால்ராஜின் கார் செட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications