எய்ட்ஸம்மா.. பிளேக்கம்மா.. கொரோனாதேவி.. மக்களை நடுங்க வைத்த கொள்ளை நோய்கள்.. நம்பி நாடும் அம்மன்கள்!
கொரோனாவை விரட்ட கொரோனாதேவி சிலை வழிபாடு
சென்னை: கோவையில் வடிவமைக்கப்பட்டுள்ள கொரோனா தேவி சிலை, பேசுபொருளாக உருவெடுத்துள்ளது..!
இந்த கொரோனா தொற்று புதிய வகையான வைரஸ்.. இது எந்த மாதிரியான தொற்று என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.. இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.. இதன் அறிகுறிகள் இவைகள்தான் என்று திட்டமாக கண்டுபிடிக்கப்படவில்லை.. இதற்காக ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் அல்லும் பகலும் பாடுபட்டு வருகிறார்கள். இப்போதைக்கு நமக்கு இருப்பது ஒரே வழி தடுப்பூசி மட்டுமே.
இத்தனை சிக்கல்கள் இருப்பதாலோ, என்னவோ அல்லது இந்த தொற்றுக்கு முடிவே ஏற்படாது என்பதாலோ என்னவோ, சிலை வைத்து வழிபடும் முறை வந்துவிட்டது.. கோயம்புத்தூர் இருகூரில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தின் 51வது சக்தி பீடத்தில் கொரோனா தேவிக்கான சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் மகா யாக பூஜை நடைபெற இருக்கிறது.
கடவுள்
இது மத நம்பிக்கை என்றும், மூட நம்பிக்கை என்றும் விவாதங்கள் கிளம்பி உள்ளன.. இந்த கொரோனா தேவி தொற்றை குணப்படுத்துவாளா என்பது தெரியவில்லை.. ஆனால், அஸ்ஸாமிலும் ஒரு கொரோனா தேவி இருக்கிறாளாம்.. அங்கும் வழிபாடுகள் நடக்கின்றன.
உயிர்பலி
இத்தனை டாக்டர்கள், நர்ஸ்கள், ஆஸ்பத்திரிகள், தடுப்பூசிகள், இருந்தும், ஏராளமான மருத்துவக் கட்டமைப்புகள் இருந்தும், உயிர்பலிகள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன? அந்த காலத்தில் எத்தனையோ கொள்ளை நோய்கள் வந்தபோது தெய்வத்திடம்தானே முறையிட்டோம்? மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தல் எத்தனையோ நோய்கள் தீர்ந்திருக்கிறதே? இப்போதும்தானே இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை? அதனால்தான் தெய்வமாக நாடுகிறோம், நோய் பறந்துவிடும் என்கிறார்கள் நம்பிக்கை மிக்கவர்கள்.
சிலை
அப்படியென்றால், தொற்று தமிழகம் முழுக்க இருக்கும்போது, கோவையில் எதற்காக சிலை வைக்க வேண்டும்? என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. இதே கோவையில் 100 வருஷத்துக்கு முன்பு பிளேக் நோய் தாக்கியதாம்.. 50 ஆயிரம் பேர் இறந்தும் விட்டார்களாம்.. அப்போது பிளேக் மாரியம்மன் சிலையை வைத்து வழிபட்டிருக்கறார்கள்.. நோயும் மெல்ல மெல்ல மறைந்துபோயுள்ளது..
பிளேக்
இதேபோல பிளேக் மாரியம்மன் சிலை கர்நாடகத்திலும் வைத்து வழிபட்டுள்ளனர்.. பிளேக்குக்கு மட்டுமல்ல, எய்ட்ஸ் நோய்க்கும், அம்மன் சிலையை வைத்து எய்ட்ஸம்மா என்று பெயரும் வைத்து வழிபட்டுள்ளனர்.. இப்போதும் இந்த எய்ட்ஸம்மா இருக்கிறாளாம்.. அந்த அம்மன்தான் அனைவரையும் இப்போதும் காத்து வருகிறதாம்.
அம்மை நோய்கள்
இதெல்லாம் மூடநம்பிக்கை என்று அப்போதைய காலகட்டத்திலும் சொல்லப்பட்டு வந்துள்ளது.. அதையும் மீறிதான் மக்கள் இந்த அம்மன்களை நம்பி உள்ளனர்.. காலரா, பிளேக், பெரியம்மை, எய்ட்ஸ், கொரோனா, இவையெல்லாமே கொள்ளை நோய்கள்.. மருந்துகள் இல்லாத நிலையில், லட்சக்கணக்கானோரை கொன்று குவித்த நோய்கள் என்பதால், இந்தியா முழுவதுமே சிலை வைத்து அம்மனை வழிபட்டு வருவது தவிர்க்க முடியாததாகி வருகிறது.
தெய்வம்
சுருக்கமாக சொன்னால், நோய்களை தெய்வமாக்கி வணங்குதல் தொடங்கி உள்ளது.. எதை பார்த்து பயப்படுகிறானோ, அதை புனிதமாக்கி தெய்வமாக்கிவிட்டால், பாதிப்பு இருக்காது என்பதே இதன் ஆழமான நம்பிக்கை.. ஆக மொத்தம் 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு செய்ததைதான், இப்போதும் செய்து கொண்டிருக்கிறான் மனிதன்.. கொரோனா தேவி, கோயம்புத்தூர் மக்களையும் தாண்டி, தொற்று பாதித்து, சுருண்டு விழுந்து கொத்து கொத்தாக செத்து கொண்டிருக்கும் உலக மக்களையே காப்பாற்றினால் மகிழ்ச்சிதான்!