ரவியை கொன்றது யார் தெரியுமா.. செத்து போன பாசம்.. மரித்து போன கருணை.. கொடூர கொரோனா அல்ல!
பிளாட்பாரத்தில் 56 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது
சென்னை: ஊரடங்கினால் எங்கே போவது என்று தெரியவில்லை.. வீடு வாசல் இல்லை.. சாப்பாட்டுக்கு வழி இல்லை.. காச நோய் பிரச்சனைவேறு.. போக்கிடம் எதுவும் இல்லாமல் அக்கா வீட்டுக்கு வந்த கூலி தொழிலாளி ரவியை வீட்டிற்குள்ளும் சேர்க்கவில்லை.. இறுதியில் பிளாட்பாரத்திலேயே ரவியின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.. இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனாவைரஸ் தமிழகத்தில் தாண்டவமாடி கொண்டிருக்கிறது.. ஊரடங்கினால் மக்களும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.. இதில் சென்னைதான் லிஸ்ட்டில் டாப்பில் உள்ளது.. எப்படி மாநகராட்சியை காப்பாற்றுவது என்று தெரியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி உள்ளனர்.. தீவிரமான முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் கூலி தொழிலாளர்கள்தான்.. இவர்களில் பெரும்பாலானோருக்கு தங்க வீடு இல்லை.. வீடு இல்லாததால் இவர்களுக்கு ரேஷன் கார்டும் இல்லை.. அதனால் அரசு தரும் அரிசியு மஇல்லை.. இவ்வளவு காலம் கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தில்தான் வயிற்றை கழுவி வந்தனர்.. அந்த வேலையும் இவர்களுக்கு இப்போது இல்லை.. இதில் வெளிமாநி தொழிலாளர்களும் அடக்கம்!!!
தொழிலாளி ரவி
இப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் ரவி.. 56 வயதாகிறது.. சென்ட்ரல் ஸ்டேஷனில் மூட்டை தூக்கும் தொழிலாளி.. அங்கேயே வேலை முடித்துவிட்டு படுத்து கொள்வார்.. இவருக்கு ஆஸ்துமா தொந்தரவும் உள்ளது.. ரயில் போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டதால் ரவிக்கு வேலை இல்லை.. அதனால் வருமானமின்றி தவித்தார்.. எனவே ஜாபர்கான் பேட்டையில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு போகலாம் என்று கிளம்பி சென்றார்.
இருமல்
ரவிக்கு ஆஸ்துமா பிரச்சினை என்பதால் அடிக்கடி இருமிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை வீட்டிற்குள் தங்க வைக்க கூடாது என்றனர்.. அதனால் வீட்டு வாசலில் ரவியை தங்க சொன்னார்கள்.. அங்கேயேதான் சாப்பாடு தரப்பட்டது.. வாசலில் தான் 20 நாளும் ரவிக்கு வாசம்.. ஆனால் அவர் இருமுவதை பார்த்து, தொற்று ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் மாநகராட்சிக்கு அங்கிருந்தோர் தகவல் சொல்லவும், அதிகாரிகள் வந்து ரவியை டெஸ்ட்டுக்கு அழைத்து சென்றனர்.
சளி மாதிரி
சளி மாதிரி எடுத்து கொண்டனர்.. பிறகு ரிசல்ட் வரும்வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அட்வைஸ் செய்து திரும்பவும் வீட்டுக்கே அனுப்பினர். ஆனால் ரவி ஆஸ்பத்திரி போய் வந்தது தெரிந்ததும், அந்த வீட்டு ஹவுஸ் ஓனர் அவரை வாசலில்கூட உட்கார அனுமதிக்கவில்லை.. ரவியின் அக்கா தங்கி உள்ளது வாடகை வீடு... அதனால் வீட்டை காலி செய்ய சொல்லி விடுவார்களோ என்று பயந்து அக்காவும், ரவியை தன் வீட்டிற்குள் சேர்க்க மறுத்துள்ளார்.
சாப்பாடு
அதனால் ரவிக்கு எங்கே போவது என்றே தெரியாமல், சாலையில் நடந்தபடியே வந்தார்.. ஒரு பிளாட்பாரத்தில் வந்து தங்கினார்.. சுற்றியிருந்தவர்கள் ரவியின் நிலையை அறிந்து சாப்பாடு தந்தனர்.. ஆனால் ரவிக்கு இருமல் அடங்கவில்லை.. உடம்பு மேலும் மோசமடைந்தது.. கவனித்து கொள்ள யாருமில்லை.. அக்கா வீட்டை விட்டு துரத்தியது மனசை உறுத்தி கொண்டே இருந்தது.. மன உளைச்சலில் இரவும், பகலும் தவித்தபடியே இருந்தார் ரவி.
சடலம்
இறுதியில் அவரது உயிர் பிரிந்தது. இதை பார்த்ததும், ரவி கொரோனாவால்தான் இறந்துவிட்டார் என நினைத்து போலீசார் அவரது சடலத்தை பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.. அவர் தங்கியிருந்த அந்த பிளாட்பாரம் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் துரிதமாக நடந்தது... ஆனால் டெஸ்ட் ரிசல்ட்டில் ரவிக்கு கொரோனா தொற்று இல்லை என வந்தது!!
யார் காரணம்?
இதற்கு பிறகு போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்தனர்.. அக்கா வீட்டு ஹவுஸ் ஓனரிடம் விசாரணை நடத்தி அவர்களை எச்சரித்தும், அறிவுறுத்தியும் அனுப்பினர்.. பரிதாபமாக ஒரு உயிர் போயுள்ளது.. அநியாயமாக ஒரு மரணம் அரங்கேறி உள்ளது.. ரவியின் இந்த மரணத்துக்கு யார் காரணம்? என்ன காரணம்? ஆனால் ரவியை கொன்றது கொரோனா இல்லை.. அதைவிட கொடூர மனங்களே!!