கொரோனா: 1000 ரூபாயை வீடு வீடா போய் கொடுங்க - ரேசன் கடைகளை திறக்காதீங்க
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாயை வீடுகளுக்கு சென்று மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவு
சென்னை: பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாயை வீடுகளுக்கு சென்று மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைகளை திறந்து நிவாரண உதவியை வழங்கும் ரேசன் கடை பணியாளர்கள் மீதும், அதனை கண்காணிக்க தவறும் சார்நிலை அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அரிசி ரேசன் கார்டு வைத்திருப்போருக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 21.83 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிக்கு 1000 ரூபாயை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 22.06.2020 முதல் 26.06.2020 வரை ரேசன் கடைகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில இடங்களில் ரேசன் கடைகளை திறப்பதாகவும், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிவாரணத்தொகை வழங்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று வழங்குவதற்கு பதிலாக,ஆங்காங்கே மொத்தமாக வரவழைத்தும் நிவாரண உதவியை வழங்கி உள்ளனர். இதையடுத்து பல புகார்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியை வீடுகளுக்கு சென்று மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என்றும், ரேசன் கடைகளில் வைத்து கொடுக்க கூடாது என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேசன் கடைகளை திறக்கக்கூடாது என்று கூட்டுறவு துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது. கடைகளை திறந்து நிவாரண உதவியை வழங்கும் ரேசன் கடை பணியாளர்கள் மீதும், அதனை கண்காணிக்க தவறும் சார்நிலை அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications