கொரோனா.. தனியார் மருத்துவமனை கட்டணம்.. தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் சென்னை ஹைகோர்ட்!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பது குறித்தும், அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரிடர் மேலாண்மை சட்டப்படி, பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசே ஏற்க வேண்டும், ஆனால், தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது தவறானது என, வலியுறுத்தினார்.
அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவை அரசே ஏற்பது குறித்தும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும் தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஷாக்கிங்.. பாஜக இளம் தலைவர் சிந்தியாவிற்கு கொரோனா பாதிப்பு.. தாயாருக்கும் பரவியதால் பரபரப்பு!
அதேபோல, இந்த வழக்கில் மத்திய அரசையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், கொரோனா தொற்று சிகிச்சைக்கு மாநிலங்களுக்கு என்னென்ன அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது என்பது குறித்தும், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.