அலட்சியம் வேண்டாம்..அவசியமில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் - டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
கடந்த 2 நாளில் கொரோனா பரவல் சதவிகிதம் குறைந்து இருப்பதால் நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரவும் வேகம் சற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 2 நாட்களிலேயே பரவல் வேகம் குறைந்துள்ளதால் மக்கள் பொது இடங்களுக்கு செல்லாமல் இருந்தாலே கொரோனாவின் வேகம் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பதற்றப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லாமல் அரசு அமைத்துள்ள ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள். அங்கு பரிசோதனை செய்து தேவையெனில் அவர்களே மருத்துவமனைக்கு அனுப்புவார்கள் என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 200 வார்டுகளில் 200 ஆட்டோ போட்டுள்ளோம். மக்களை வரவழைத்து அருகிலுள்ள சோதனை மையங்களுக்கு அழைத்து வருகிறோம். சோதனையில் தொற்று உள்ளவர்களை, சுமார் 100 வாகனங்களைப் பயன்படுத்தி சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஸ்க்ரீனிங் சென்டர்களுக்கு அழைத்து வருகிறோம்.
அங்கு அவர்களுக்கு முழுமையான எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை செய்து முழுமையாக அவர்களைத் தரம் பிரித்து விடுகிறார்கள். அங்கு உங்களுக்குப் பெரிய அளவில் தொற்று பாதிப்பு இல்லை என்றால் முழுமையான நோயுற்றவர்களுடன் நீங்கள் மருத்துவமனைகளில் இருக்க வேண்டிய தேவை இல்லை.
அதே நேரம் பல்ஸ் ஆக்சிமீட்டரில் ஆக்சிஜன் அளவு 90க்குக் கீழே இருந்தது என்றால் மற்ற சோதனைகள் இல்லாமல் இங்குள்ள வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த ஸ்க்ரீனிங் சென்டர்களை முழுமையாகப் புரிந்துகொண்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்னுடைய இரண்டாவது வேண்டுகோள். கடந்த இரண்டு நாட்களில் கொரோனா தொற்று ஏறுமுகத்தின் வேகம் குறைந்துள்ளது. அது நல்ல செய்தி. ஆனால், அதையே நினைத்து அலட்சியமாக இல்லாமல் இன்னும் சற்று கடினமாக நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால் இதை இறங்கு முகத்துக்குக் கொண்டு வரலாம்.
அதேபோன்று ஆங்காங்கே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கடைப்பிடிக்கும்போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். நாம் படுக்கை வசதிகள் உள்ள மருத்துவமனைகள் குறித்து தகவல் கொடுத்துள்ளோம். கூடுதலாக 12,000 ஆக்சிஜன் படுக்கைகளைக் கொண்டுவர உள்ளோம். அதற்கு முதற்கட்டமாக இந்த வாரக் கடைசிக்குள் 2,000 படுக்கைகள் தயாராகிவிடும்.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் கொண்டு வர உள்ளோம். ஒட்டுமொத்தமாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 12,031 படுக்கைகள் உள்ளன.
கோவிட் மருத்துவமனைகள் 5, கோவிட் ஹெல்த் சென்டர் 11, கோவிட் கேர் சென்டர் 14. இதில் 7,502 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 3,570 படுக்கைகள் காலியாக உள்ளன. இருப்பினும் பொதுமக்கள் ஓமந்தூரார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இரவில் நேரடியாக வருவதன் மூலம் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க பகல் நேரத்தில் ஸ்க்ரீனிங் சென்டர்களுக்கு வாருங்கள். பதற்றமடையாதீர்கள். அங்கு அவர்களே உங்களைப் பரிசோதித்து நோய் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். தேவைப்படாதவர்கள் நீங்களே கூடுதலாக நோயைத் தேடிக்கொள்ளாமல் மருத்துவமனைக்குப் போகாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இன்று ஸ்கிரீனிங் மையத்தில் ஆய்வு செய்தோம். இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரவும் வேகம் சற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த இது ஒரு நல்ல அறிகுறி. ஆனால் இதையே நாம் நம்பிக்கொண்டு இருக்க கூடாது. 2 நாட்களிலேயே பரவல் வேகம் குறைந்துள்ளதால் மக்கள் முககவசம் அணிவது, பொது இடங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினால் மிகவும் அது பயனுள்ளதாக இருக்கும்.
பொதுமக்கள் அடுத்த சில நாட்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இந்த நேரத்தில் கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
கொரோனாவால் இந்திய அளவில் திணறக்கூடிய நிலையை பார்க்கும்போது தமிழ்நாட்டில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மகாராஷ்டிராவை விட ஐந்தில் ஒரு பங்கு பாதிப்பு தான் இங்கு உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவை விட பாதி அளவு பாதிப்பு தான் இங்கு உள்ளது என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான கருத்து.
ஒருநாளில் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் 30 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். கடந்த 2 நாளில் பரவல் சதவீதம் குறைந்து இருப்பதால் நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கட்டுப்பாடுகளை பின்பற்றினால் இனி கொரோனாவை இறங்கு முகத்துக்கு கொண்டுவர முடியும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications