மூளை அதிகமாகி மூக்கிலும் காதிலும் வழிபவர்கள் முதல்வரை விமர்சிக்கின்றனர் - மா.சுப்ரமணியன் காட்டம்
தமிழகத்தில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: சமூக வலைதளங்களில் மூளை அதிகமாகி மூக்கிலும் காதிலும் வழிபவர்கள், முதல்வரைப் பற்றி தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். முன்களப் பணியாளர் என்ற முறையில் சரியான நேரத்தில் முதல்வர் தடுப்பூசி எடுத்துக் கொண்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி உள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுடன் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மருத்துவ இடங்கள் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்படும். 4 நாட்களில் அதற்கான ஆணை வெளிவரும் என்று கூறினார்.
24 மணி நேரமும் தடுப்பூசி
தமிழகத்தில் 75 % சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . 23 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது .
அச்சம் வேண்டாம்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மூன்று விதமாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அச்சப்படாமல் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
முன்களப்பணியாளர் முதல்வர்
தமிழகத்தில் தற்போது 70 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் உரியக் காலத்துக்கு முன்பாகவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக ஒரு வதந்தி பரவிவந்தது. இது பற்றிச் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், `அவர் ஒரு முன்களப் பணியாளர் என்ற முறையில் சரியான நேரத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டார் எனத் தெரிவித்தார்.
மூளை அதிகமாகி மூக்கில் வழிகிறது
சிலர், எதற்காக விமர்சனம் செய்கிறோம் என்று தெரியாமலேயே விமர்சனம் செய்துவருகிறார்கள். சமூக வலைதளங்களில் மூளை அதிகமாகி மூக்கிலும் காதிலும் வழிபவர்கள், இது மாதிரியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்று கூறினார். மேலும் அவர், இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் பணம் சேர்த்து ஆனந்தம் அறக்கட்டளையுடன் இணைந்து 25 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்கு உதவியாக ஆன்டிரோய்டு கைப்பேசி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.