2ம் அலையும் இப்படித்தான் தொடங்கியது.. மிரட்டும் AY.4.2 வகை கொரோனா.. 3ம் அலைக்கான டிரெய்லரா?
சென்னை: பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது.
Recommended Video
பல்வேறு வகையான கொரோனா வைரஸ் வகைகள் உலகம் முழுக்க பரவி வருகின்றன. ஒரு வகையான கொரோனா இன்னொரு வகையாக உருமாற்றம் அடைந்து முன்பை விட ஆபத்து அதிகமானதாகவோ, ஆபத்து குறைவானதாகவோ மாறி மக்களிடையே பரவி வருகிறது. கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே அது பல்வேறு வகைகளாக உருமாறிக் கொண்டுதான் இருக்கிறது.
ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் செல்லும் போது அப்படியே செல்லாமல் கொரோனா வைரஸின் புரோட்டின்களில் லேசாக மாற்றம் ஏற்படும். அதாவது ஏ என்ற நபரிடம் இருந்து பி என்ற நபருக்கு கொரோனா செல்லும் போது அதன் புரோட்டினில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நவ.4ல் தொடக்கம் - நவ.9ல் சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை
வேரியண்ட்
கொரோனாவின் புரோட்டின் இப்படி மாற்றம் அடைவதால் அதன் குணங்களும், திறனும் மாற்றம் அடைகிறது. இதன் காரணமாக உருவாகும் புதிய பண்புகள் கொண்ட கொரோனாவே உருமாறிய கொரோனா என்று அழைக்கப்படும். இதை வேரியண்ட் என்று அழைப்பார்கள். பல புதிய வகை கொரோனா வைரஸ்கள் தோன்றுவதால் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் புதிய கொரோனா அலைகள் தோன்றி வருகின்றன.
பல வகை
இந்த வேரியண்ட்களை கிரேக்க எழுத்துக்களில் அழைப்பார்கள். ஏற்கனவே ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பல வகை கொரோனா உள்ளது. இதில் டெல்டா இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டது. இது இந்தியாவில் தோன்றவில்லை. ஆனால் இங்கு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுக்க 90 நாடுகளில் டெல்டா பரவி உள்ளது. இன்னொரு பக்கம் டெல்டா + வைரஸ் (B.1.617.2.1) டெல்டாவில் (B.1.617.2) இருந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இன்னும் பல வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுக்க ஆங்காங்கே பரவி வருகிறது.
இரண்டாம் அலை
சில வகை கொரோனா வைரஸ்கள் அதிக ஆபத்தானதாகவும், வீரியம் கொண்டதாகவும் இருக்கும். உதாரணமாக இந்தியாவில் இரண்டாம் அலை மிக மோசமாக இருந்தது. இதற்கு காரணம் டெல்டா வகை. டெல்டா வகை கொரோனா இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக பரவி பின் வீரியம் எடுத்தது. வீட்டிலேயே இருந்தவர்களுக்கு கூட டெல்டா வகை கொரோனா பரவியது. இந்தியாவில் இரண்டாம் அலையில் பல லட்சம் மரணங்களும், கேஸ்களும் ஏற்பட டெல்டா வகை முக்கிய காரணமாக இருந்தது.
மீண்டும் ஒரு வகை
இந்த நிலையில்தான் தற்போது டெல்டா வகையில் இருந்து பிரிந்து புதிய கிளை வேரியண்ட் ஒன்று உருவாகி உள்ளது. டெல்டா வகை வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு புதிய வகையான AY.4.2 கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முதல் கட்டமாக பிரிட்டனில் இந்த AY.4.2 வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல புதிய வகை கொரோனா பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா அதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
உருமாற்றம்
டெல்டாவில் (B.1.617.2) இருந்து உருமாற்றம் அடைந்து டெல்டா + வைரஸ் (B.1.617.2.1) உருவானது. அதேபோல்தான் டெல்டாவில் (B.1.617.2) இருந்து உருமாற்றம் அடைந்து AY.4.2 வகை கொரோனா உருவாகி உள்ளது. டெல்டாவில் இரண்டு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 222வது புரோட்டின் Aல் இருந்து V ஆக மாறி உள்ளது. அதேபோல் 145 புரோட்டின் Yல் இருந்து 5H ஆக மாறியுள்ளது. அதாவது A222V மற்றும் Y145H ஆகிய மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனால் இதை AY.4.2 வகை கொரோனா என்று அழைக்கிறார்கள். இதன் அதிகாரபூர்வ பெயர் VUI-21OCT-01. (அக்.1ல் கண்டுபிடிக்கப்பட்டது)
அதிர்ச்சி
இந்த நிலையில்தான் யு.கேவில் இந்த புதிய AY.4.2 வகை கொரோனா அதிகம் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பரவும் மொத்த AY.4.2 வகை கொரோனா கேஸ்களில் 96 சதவிகித கேஸ்கள் யு.கேவில் பதிவாகி வருகிறது. அதனை அடுத்து தலா 1 சதவிகித கேஸ்கள் டென்மார்க், ஜெர்மனியில் பரவி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகளிலும் ஒரு சில AY.4.2 வகை கொரோனா கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பலம் வாய்ந்தது
இப்போது வரை AY.4.2 வகை கொரோனா எவ்வளவு பலம் வாய்ந்தது என்று உறுதி செய்யப்படவில்லை. இதன் பரவும் திறன் இனிதான் கண்டுபிடிக்கப்படும். இப்போது யுகேவில் தீவிரம் எடுத்து வருவதால் விரைவில் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் வேக்சின்கள் இந்த AY.4.2 வகை கொரோனாவிற்கு எதிராக எவ்வளவு திறன் கொண்டது என்ற விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் AY.4.2 வகை கொரோனா வைரஸ் கொஞ்சம் புரியாத புதிராகவே உள்ளது.
அதிகரிப்பு
சமீப நாட்களில் AY.4.2 வகை கொரோனா கண்டறியப்பட்ட நாடுகளில் கொரோனா கேஸ்கள் திடீரென அதிகரிப்பது AY.4.2 வகை கொரோனா வைரஸ் மீதான அச்சத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் திடீரென 65+ ஆயிரம் கேஸ்கள் பதிவாகி உள்ளது. ரஷ்யா, பிரிட்டன், யுகே, துருக்கியில் திடீரென 40 ஆயிரத்திற்கும் அதிகமாக தினசரி கேஸ்கள் பதிவாகிறது. ஏன் சீனாவிலும் கடந்த 10 நாட்களாக திடீரென 300க்கும் அதிகமான கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது அலை?
இதற்கும் டெல்டாவின் புதிய வகையான AY.4.2 வகை கொரோனாவிற்கு தொடர்பு இருக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால் இதற்கான முழுமையான டேட்டா இன்னும் வெளியே வரவில்லை. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பெரிதாக இதுவரை உயரவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 13,508 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 33,589,672 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 169,509 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
இரண்டாம் அலை போல வருமா
இந்தியாவில் தொடர்ந்து 11-14 ஆயிரம் இடையில்தான் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. மூன்றாம் அலைக்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை. கேரளா (7000 கேஸ்கள்) உள்ளிட்ட மாநிலங்களில் லேசாக கேஸ்கள் உயர்ந்து உள்ளன. இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும்.. டெல்டா மூலம் இரண்டாம் அலை ஏற்பட்டது போல AY.4.2 வகை கொரோனா மூன்றாம் அலையை தூண்டி விடுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.