திமுக கூட்டணியில் சிபிஐக்கு திருப்பூர் துணை மேயர், 1 நகராட்சி, 3 பேரூராட்சி தலைவர்கள் பதவி ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சி.பி.ஐ) திருப்பூர் துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கூத்தாநல்லூர் நகராட்சி உட்பட 3 பேரூராட்சிகளின் தலைவர்கள் பதவிகளும் சி.பி.ஐ.க்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளின் வார்டுகளுக்கு இத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் திமுக கூட்டணியே பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. இத்தேர்தலில் வென்ற வார்டு கவுன்சிலர்கள் தமிழகம் முழுவதும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுக தமது கூட்டணி கட்சிகளுக்கு இப்பதவிகளுக்கான ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர் பதவி, வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் பேரூராட்சி பதவிகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடிநாயக்கனூர் நகராட்சி துணைத் தலைவர் பதவிகள்; கூத்தைப்பார், ஊத்துக்குழி, மேல சொக்கநாதபுரம், கீரமங்கலம், சேத்தூர், ஜம்பை பேரூராட்சிகளில் துணைத் தலைவர் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications