சிபிஎம் செயலாளர் சண்முகம்-வாச்சாத்தி பெண்கள் பலாத்கார வழக்கில் 216 அதிகாரிகளை சிறையில் தள்ளிய நாயகன்
சென்னை: தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி வனப்பகுதியில் 18 பழங்குடி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 215 வனத்துறையினருக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுத்து நீதியை வென்றெடுத்தவர்தான் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.சண்முகம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணன், வயது மூப்பு காரணமாக பதவி விலகினார். இதனையடுத்து விழுப்புரத்தில் நடந்த சிபிஎம் மாநில மாநாட்டில் பெ.சண்முகம், புதிய தமிழ் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிபிஎம்-ன் கட்சியின் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டவைகளின் தலைவராகப் பதவி வகித்தவர் பெ.சண்முகம். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக பெ.சண்முகம் பொறுப்பு வகித்த காலத்தில்தான் இந்தியாவையே உலுக்கிய வாச்சாத்தி பலாத்கார சம்பவம் வெளி உலகத்துக்கு கொண்டுவரப்பட்டது.
வாச்சாத்தி சம்பவம் என்பது என்ன?
சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்த காலம்.. 1992-ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சத்தி மலைகிராமத்துக்கு வனத்துறையினரை உள்ளடக்கிய மிகப் பெரிய அதிகாரிகள் படை நுழைந்தது. அந்த கிராமத்தில் சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி கண்ணில் தென்பட்ட ஆண்கள், பெண்கள் அனைவரையும் அடித்து தாக்கி கொத்து கொத்தாக தூக்கி வேன்களில் ஏற்றி விசாரணை என்ற பெயரில் வெட்கித் தலைகுனிய வைக்கக் கூடிய கொடூரங்களை அரங்கேற்றியது. 18 பழங்குடி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட இந்த சம்பவத்தில் 269 அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டனர். இவர்களில் சிலர் இறந்துபோக 2023-ம் ஆண்டுதான் 215 அரசு அதிகாரிகள் குற்றவாளிகள் என சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கொடூரமான வாச்சாத்தி வழக்கை வெளியே கொண்டு வந்தது சிபிஎம். இன்றைக்கு சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வாகி இருக்கும் பெ.சண்முகம், தலைவராக இருந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கல் சங்கம்தான் இந்த அட்டூழியத்தை வெளி உலகத்துக்கு கொண்டு வந்து நீதியை நிலைநாட்டியது.

வாச்சத்தி வழக்கில் நடந்தது என்ன?
வாச்சத்தி வன்கொடுமை வழக்கு வெளியே வந்தது எப்படி?
வாச்சத்தி வழக்கு பற்றி இனி பெ. சண்முகம் கூறுவதை கேளுங்கள்..
வாச்சத்தி என்பது முழுமையாக பழங்குடி மக்கள் மட்டுமே வசிக்கக் கூடிய கிராமம். குறிப்பாக 'மலையாளி' என்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். 1992 ஜூன் 20,21,22 ஆகிய 3 நாட்கள் வனத்துறை, காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அந்த கிராமத்துக்குள் புகுந்து, மக்கள் சந்தனக் கட்டைகளை கடத்துவதாக கூறி கிராமத்தையே அடித்து நொறுக்கி 180-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதில் 18 இளம் பெண்களை தனியே அழைத்துச் சென்று ஏரிக்குள் சந்தனக் கட்டைகள் புதைக்கப்பட்டதாகவும் அதை எடுக்கவேண்டும் எனவும் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தனர். இதனை அந்த பெண்கள் வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக சேலம் சிறையில் அடைத்தனர்.
இந்த விஷயங்கள் அனைத்துமே தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாடு நடைபெற்ற போது, வாச்சாத்தியை விட்டு தப்பி ஓடி வந்து பதுங்கி இருந்த சிலரால் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடந்து 26 நாட்கள் கழித்து 1992 ஜூலை 14-ந் தேதி அந்த கிராமத்துக்கு சென்றோம். அதுவரை 26 நாட்களாக இந்த சம்பவம் வெளி உலகத்துக்கே தெரியவில்லை.

நாங்கள் அந்த கிராமத்துக்கு சென்ற போது காடுகளில் 45 பேர் ஒளிந்து கொண்டிருந்தனர்; அவர்களை வரவழைத்து பேசினோம். பின்னர் சேலம் சிறைக்கும் அங்கே அடைக்கப்பட்டிருந்த பெண்களை பார்த்த போதுதான் 18 பேர் பலாத்காரம் செய்யப்பட்ட தகவலும் எங்களுக்கு தெரிந்தது. அதுவும் சிறை வார்டனாக இருந்த பெண் அதிகாரி ஒருவர்தான், 18 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட தகவலையே தெரிவித்தார்.
வெளிச்சத்த்க்கு வந்த வாச்சாத்தி வழக்கு
இதனையடுத்துதான் அரூரில் தொடங்கி சென்னை வரை பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் 5 நாட்கள் நடத்தினேன். ஆனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இப்படி ஒரு சம்பவே நடக்கவில்லை என்றார். இதை சட்டசபையிலேயே தெரிவித்தார் ஜெயலலிதா. இதனையடுத்தே சென்னை மலைவாழ் சங்கத்தின் சார்பாகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதனை நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்பியாக இருந்த ஏ.நல்லசிவம் எழுப்பி இருந்தார்.
வாச்சாத்தி வழக்கு கடந்து வந்த பாதை இதுதான்..
சென்னை உயர்நீதிமன்றம் முதலில் இந்த பொதுநலன் வழக்கை தள்ளுபடி செய்தது. அப்போது, அதிகாரிகள் அனைவரும் படித்தவர்கள்- உயர் அதிகாரிகள்; நீங்கள் சொல்வதை நம்பமுடியவில்லை என கூறி எங்கள் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பத்மினி ஜேசுடுரை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தோம். அப்போதுதான் இந்த வழக்கை எவ்வளவு விரைவாக விசாரிக்க முடியுமோ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட்டது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட 1996-ல்தான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டது. 19 ஆண்டுகள் இவ்வழக்கு தருமபுரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதலில் நடந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் 269 பேரும் குற்றவாளிகள் என தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவிலேயே அரசு பணியில் இருக்கக் கூடியவர்கள் இத்தனை பேர் ஒரே வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் வழக்கு இது. இதில் இறந்தவர்கள் போக 216 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஒராண்டு முதல் 10 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டது..இந்த வழக்கில் மேல்முறையீட்டு வழக்கிலும் 216 பேரும் குற்றவாளிகளே என் 2023-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications