தவெக கொள்கைத் தலைவர் பெரியார் நினைவு நாளுக்கும் அதேபோல மரியாதை.. வழக்கம் போல விஜய் வெளியிட்ட போட்டோ!
சென்னை: தவெக தலைவர் விஜய், கட்சியின் கொள்கைத் தலைவரான பெரியார் நினைவு நாளுக்கு, கட்சி அலுவலகத்திலேயே பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாவட்ட வாரியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் தவெக தலைவர் விஜய். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தடைபட்டன.
இந்நிலையில் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் விஜய். அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் விஜய் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தவெகவின் கொள்கைத் தலைவரான தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு மாலை அணிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 52 ஆவது நினைவு இன்று. தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினராலும் அனுசரிக்கப்படுகிறது. பெரியார் நினைவு நாளையொட்டி பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று தவெக தலைமை அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
இது குறித்த புகைப்படத்தை விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார். மேலும், "சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன். தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்." என தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், தனது கட்சி அலுவலகத்தில் இருந்தபடியே, தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்துவது போல புகைப்படங்களை வெளியிட்டு வருவது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. அண்மையில் அம்பேத்கர் நினைவு நாளன்றும் இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் விஜய்.












Click it and Unblock the Notifications