2 ட்விஸ்ட்.. எதிர்பார்க்காத பிளானிங்.. வீழ்த்த முடியாத "வேம்புலி" மும்பையை சிஎஸ்கே சாய்த்தது எப்படி?
சென்னை: துபாயில் இன்று நடந்த ஐபிஎல் 2021 லீக் போட்டியில் வீழ்த்தவே முடியாது என்ற கருதப்பட்ட வேம்புலி மும்பையை சிஎஸ்கே அணி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சொதப்பலாக ஆடிய சிஎஸ்கே பாதி ஆட்டத்திற்கு மேல் மீண்டும் வந்து வென்று இருக்கிறது.
Recommended Video
2021 ஐபிஎல் சீஸனின் இரண்டாம் பாதி ஆட்டம் இன்று தொடங்கியது. இன்று இரண்டாவது லீக் போட்டியில் தொடக்கத்தில் மும்பை சென்னை அணிகள் மோதின. இன்று சிஎஸ்கே சார்பாக டு பிளசிஸ், ருத்துராஜ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, ஷர்த்துல் தாக்கூர், தீபக் சாகர், ஹசல்வுட் ஆகியோர் களமிறங்கினார்கள்.
நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க முடிவு
மும்பை அணியில் இன்று ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. மும்பை அணியில் டி காக், இஷான் கிஷான், சூர்யா குமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கைரன் பொல்லார்ட், சோரப் திவாரி, குர்ணால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாகர், பும்ரா, போல்ட் ஆகியோர் ஆடினார்கள்.இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் இருந்தே மும்பைதான் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.
சொதப்பல்
எங்கே தோனி பேட்டிங் தேர்வு செய்து தவறு செய்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு சிஎஸ்கே பேட்டிங் சொதப்பலாக இருந்தது. வந்த வேகத்தில் டு பிளசிஸ், ரெய்னா, மொயின், அலி, தோனி என்று வரிசையாக ஒவ்வொரு வீரராக அவுட் ஆனார்கள். வெறும் 24 ரன்கள் எடுத்து இருந்த போதே சிஎஸ்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது என்று நினைத்த போதுதான் நீயே ஒளி என்று சிஎஸ்கேவின் ஒற்றை ஒளியாக ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கி அதிரடி காட்டினார். இவரின் இன்னிங்ஸ்தான் இன்று மொத்த போட்டியை மாற்றியது.
மாற்றியது
முதல் 20 பந்துகள் மெதுவாக ஆடி, திணறியவர், கடைசி 10 ஓவரில் வெளுத்துக்கட்ட தொடங்கினார். கடினமான முதல் 10 ஓவர்களில் கவனமாக ஆடிவிட்டு கடைசி 10 ஓவரில்தான் ருத்துராஜ் அதிரடி காட்டினார். ஆங்கர் இன்னிங்ஸ் என்று சொல்லுவது போல நங்கூரம் போட்டு ருத்துராஜ் ஆடினார். 58 பந்துகள் பிடித்த ருத்துராஜ் 88 ரன்கள் எடுத்தார். அதிலும் 4 சிக்ஸர் அடித்து 9 பவுண்டரி அடித்து மும்பை வசம் இருந்த மேட்சை அப்படியே தூக்கிக்கொண்டு வந்து சென்னை கையில் கொடுத்தார். இதனால் சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது.
முதல் ட்விஸ்ட்
ருத்துராஜின் இந்த ஆட்டம்தான் முதல் ட்விஸ்ட். இவரின் இந்த பேட்டிங்தான் ஆட்டத்தை மாற்றியது. அதன்பின் களமிறங்கிய மும்பையை முதல் ஓவரில் இருந்தே திட்டமிட்டு சிஎஸ்கே சாய்த்தது. சூர்யா குமார் யாவிற்கு அமைக்கப்பட்ட பீல்டிங், இஷான் கிஷான் வந்ததும் பிராவோவை களமிறக்கி ஷார்ட் மிட் ஆனில் சரியாக ரெய்னாவை களமிறக்கி விக்கெட் எடுத்தது என்று சிஎஸ்கே கேப்டன் தோனியின் பவுலிங் செலக்ஷன், பீல்டிங் செட்டப் எல்லாமே இன்று சிறப்பாக இருந்தது.
ஜடேஜா
இன்றும் சிஎஸ்கே அணிக்கு எதிராக முதல் லீக் ஆட்டம் போலவே கைரன் பொல்லார்ட் அச்சுறுத்தலாக இருந்தார். இதனால் கைரன் வந்ததும் ஜடேஜாவை இறக்கி தோனி சோதனை செய்து பார்த்தார். ஆனால் ஜடேஜா செட்டாகவில்லை என்றதும் அடுத்து ஓவர்களிலேயே ஹஸல்வுட்டை இறக்கி கைரனை கலங்கடித்தார் தோனி. சரியாக டேஸ் ஸ்டைல் பால் காரணமாக ஹஸல்வுட் பவுலிங்கில் கைரன் பொல்லார்ட் எல்பிடபிள்யூ ஆகி அவுட் ஆனார். இதுதான் ஆட்டத்தின் இரண்டாவது ட்விஸ்ட் முதல் லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் காரணமாக ஜெயிக்க வேண்டிய போட்டியில் சிஎஸ்கே மும்பையிடம் தோல்வி அடைந்தது. அதற்கு இன்று சிஎஸ்கே தரமான பிளானிங் மூலம் பழி தீர்த்துக் கொண்டது.
யாருமே ஆடவில்லை
மும்பை அணியில் டி காக் 17, அன்மோல் 16, இஷான் கிஷான் 11, பொல்லார்ட் 15, க்ருனால் பாண்டியா 4 , சூர்யா குமார் 3 என்று பெரிதாக யாருமே இன்று ரன்கள் எடுக்கவில்லை. சோரப் திவாரி மட்டுமே ஆமை வேகத்தில் இன்று ஆடி 50 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.