பாமகவுக்கு 9+1..இந்த 7 தொகுதிகள் கட்டாயம்.. அதிமுக சிவி சண்முகத்திடம் கறாராக பேசிய டாக்டர் ராமதாஸ்!
சென்னை: அண்ணா திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 9 லோக்சபா தொகுதிகள், 1 ராஜ்யசபா இடம் ஒதுக்க வேண்டும் என தம்மை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சிவி சண்முகத்திடம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்ணா திமுக வெளியேறிவிட்டது. லோக்சபா தேர்தலில் அண்ணா திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

பாஜக தீவிரம்: இன்னொரு பக்கம் அதிமுக பக்கம் கட்சிகள் போய்விடாமல் தடுக்க பாஜகவும் மெகா கூட்டணிக்கான முயற்சிகளில் மும்முரமாக உள்ளது. அதிமுகவும் பாஜகவும் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை வளைப்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
பாமகவுடன் அதிமுக தொடர் பேச்சுவார்த்தை: இந்த நிலையில் அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பாமக எம்.எல்.ஏக்கள் சிலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து பாமகவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்பட்டது. நாமும் இதனை செய்தியாக பதிவு செய்திருந்தோம்.
மீண்டும் சிவி சண்முகம்- டாக்டர் ராமதாஸ் சந்திப்பு: இந்த நிலையில் நேற்று இரவு திடீரென டாக்டர் ராமதாஸை சிவி சண்முகம் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் அதிமுக கூட்டணிக்குதான் பாமக போகும் என்பது உறுதியாகிக் கொண்டே இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
ஓடி வாங்க 12+2 தருகிறோம்... எங்ககிட்ட ஜெயிக்கிற 8 சீட் கன்ஃபார்ம்.. பாமகவுக்கு பாஜக, அதிமுக 'வலை’
டாக்டர் ராமதாஸ் கேட்டது என்ன?: சிவி சண்முகம், டாக்டர் ராமதாஸ் சந்திப்பு தொடர்பாக பாமக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, தேர்தலில் பாமகவுக்கு 9 லோக்சபா தொகுதிகளுடன் 1 ராஜ்யசபா இடம் தர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தினார். அத்துடன் 9 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளை வடமாவட்டங்களில்தான் ஒதுக்க வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் நிபந்தனை விதித்தாராம். கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், சேலம் ஆகிய 7 தொகுதிகளை கட்டாயம் பாமகவுக்கு தந்தாக வேண்டும் என டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார் என்கின்றன.
அதிமுக தரப்பு சொன்னது என்ன?: இந்த சந்திப்பு தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, டாக்டர் ராமதாஸிடம் பேசிய சிவி சண்முகம், 2019 லோக்சபா தேர்தலைப் போலவே பாமகவுக்கு 7 லோக்சபா தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் தருவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகள் வழங்கவும் அதிமுக தயாராக இருக்கிறது என தெரிவித்தாராம்.
2019 தேர்தல் முடிவுகள் என்ன?: 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அத்தேர்தலில் அதிமுக 20 இடங்களில் போட்டியிட்டு 1 தொகுதியில் வென்றது. பாமக 7 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அதேபோல பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனை இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. தேமுதிகவும் 4 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெல்லவில்லை. 2019 லோக்சபா தேர்தலில் பாமக மொத்தம் 5.36% வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications