குடை ரெடியா.. சென்னையை நெருங்கியது கஜா.. 3 நாட்களுக்கு மழை பெய்யும்
Recommended Video
சென்னை: வங்கக் கடலில், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி கஜா புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த புயல் நாளை மாலை கடலூர் மற்றும் பாம்பன் நடுவே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
இன்று மதியம் 3 மணி நிலவரப்படி கஜா புயல் சென்னையில் இருந்து, கிழக்கே, 490 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வட கிழக்கே, 580 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக இந்த புயல், மணிக்கு, 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.
இந்த புயல் சுழன்றபடியே, தெற்கு மற்றும் தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. நாளை மாலைக்குள், கடலூர்-பாம்பன் நடுவே கரையை கடக்க கூடும். கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நாளை 80-90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பரவலாக இம்மாவட்டங்களில் மழை இருக்கும். சில இடங்களில் கன மழை இருக்கும். நாளையிலிருந்து சென்னையில் மழை தொடங்கும். நகரில் இரண்டு, மூன்று நாட்களுக்கு மிதமான மழை இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று இரவுக்குள், சென்னைக்கும், புயல் இருக்கும் இடத்திற்குமான தொலைவு என்பது, மேலும் குறைந்துவிடும். எனவே சென்னை, நாகை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.