டவ்-தே புயல்.. கேரளாவில் விடாமல் பெய்யும் கனமழை.. ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. பதறவைக்கும் வீடியோ!
சென்னை: டவ்-தே புயல் காரணமாக கேரளாவில் கடுமையான மழை பெய்ய தொடங்கி உள்ளது. கேரளாவில் பல்வேறு ஊர்களில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல ஊர்களுக்குள் கடல் நீரும் உள்ளே புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளனர்.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. நாளை இந்த தாழ்வு நிலை முழு தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பின் புயலாக மாறும்.
இந்த டவ்-தே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 16ம் தேதி உருவாகும் இந்த புயல் 17ம் தேதி அதி தீவிர புயலாக அரபிக்கடலில் உருமாறும். பாகிஸ்தான் அல்லது குஜராத் நோக்கி இந்த புயல் செல்ல வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எப்படி
இந்த புயல் குஜராத் அருகே அல்லது பாகிஸ்தான் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதி தீவிர புயலாக மாறும் கரையை கடக்கும் போது இதன் வேகம் 160 கிமீ வரை கூட இருக்கும். டவ்-தே புயல் காரணமாக கேரளா, தமிழ்நாடு, கோவா, கர்நாடக, குஜராத் , மகாராஷ்டிரா ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
|
வெள்ளம்
இந்த புயல் காரணமாக 220 மிமீ வரை கடுமையான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆழப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோட்டையம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
|
ரெட் அலெர்ட்
அதேபோல் கேர்ளாவில் நாளை மலப்புரம், கோழிக்கோடு,கண்ணூர் , காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. கேரளாவில் இப்போதே இதனால் கடுமையான மழை பெய்ய தொடங்கி உள்ளது. கேரளாவில் கொச்சி, எர்ணாகுளம், கொல்லம் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசியபடி தீவிர மழை பெய்து வருகிறது.
|
செல்லனம்
பல்வேறு கடலோர மாவட்டங்களில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதோடு கடல் நீரும் உள்ளே புகுந்துள்ளது. முக்கியமாக கேரளாவில் கொச்சியில் உள்ள செல்லனம் பகுதியில் நேற்று மாலையில் இருந்து தீவிரமாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் தொடங்கிய மழை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.
வெள்ளம்
புயல் காற்று காரணமாக கடல் நூறும் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள் நீருக்குள் மூழ்கி உள்ளன. கடந்த ஓக்கி புயலின் போதும் கூட இதே செல்லனம் கிராமம் கடுமையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் புயல் காரணமாக செல்லனம் கிராமத்திற்குள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மோசம்
செல்லனம் கிராமத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்ட கிராமங்களில் செல்லனம் கிராமமும் ஒன்று. தற்போது இங்கு வெள்ளம், புயலும் சேர்ந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளனர்.