"யார் வூட்ல பார்ட்டி, நம்ம வூட்ல பார்ட்டி"... இது ஒரு பாட்டா?.. சினிமா பாடலை கலாய்க்கும் ஜெயக்குமார்!
சென்னை: யார் வூட்ல பார்ட்டி, அட எங்க வூட்ல பார்ட்டி.. இதெல்லாம் ஒரு பாட்டா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அதாவது ஜெயலலிதா இறப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்த போது, அதிமுக இரு அணிகளாக செயல்பட்ட போது பல்வேறு சர்ச்சைகள், பிரச்சினைகள், நிருபர்களின் கேள்விக் கணைகளை மிகவும் திறமையாக கையாண்டவர்.
எந்த கேள்வி கேட்டாலும் கோபப்படாமல் சிரித்த முகத்துடன் பதில் அளித்தவர் ஜெயக்குமார். அவர் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி, கேள்வி பதில் வடிவில்:
தூங்கி எழுந்ததும் கோடீஸ்வரன்.. ஆனா கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே.. இது டிரில்லியன் டாலர் கதை!
அகத்தின் அழகு
கே: ஆண்டுகள் கூடி கொண்டே இருந்தாலும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்களே இதற்கு என்ன காரணம்?
ப: அகத்தின் அழகு முகத்தில் தெரியும். வயது என்பது வெறும் எண் மட்டுமே. வயது கூடுதேனு நான் கவலையேபட்டது இல்லை. இது ஒரு புறம் எனக்கு மனவலிமையை ஏற்படுத்துகிறது. எந்தக் கவலையையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். ஒரு பெரிய உதாரணத்தை நான் உங்களுக்கு கூறுகிறேன். நான் 2012 ஆம் ஆண்டு சபாநாயகர் பதவி வகித்தேன். அந்த பதவியில் அவையையே நான்தான் வழிநடத்தினேன். அப்போது என் மீது தவறான குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து திடீரென சபாநாயகர் பதவியிலிருந்து இறக்கப்பட்டேன்.
சபாநாயகர்
ஒரு கமாண்டிங் பதவியிலிருந்த நான் திடீரென கீழே இறங்கி வந்து அமரவைக்கப்பட்டேன். இந்த சூழல் ஒருவருக்கு எப்படியிருக்கும் என பாருங்கள். ஆனால் நானோ இதையெல்லாம் பெரிதாகவே எடுத்துக் கொள்ளாமல் எப்போதும் போல் ஜாலியாகவே இருந்தேன். என்னுடன் இருந்த எம்எல்ஏக்கள் சொல்வார்கள், இத்தனை கஷ்டம் வந்தாலும் எப்படி அண்ணே டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்பார்கள். அது போல் எந்த விஷயத்தை நினைத்து கவலைப்படாமல் இருந்தால் எப்போதும் இளமையாக தெரியலாம். எது நடந்தாலும் நன்மைக்கே என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். இதன் பிறகு நான் தவறு செய்யவில்லை என புரிந்து கொண்ட ஜெயலலிதா, எனது மகனுக்கு எம்பி பதவியை கொடுத்து, 2016ஆம் ஆம் ஆண்டு எனக்கு எம்எல்ஏவாக்கி, அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
அரசியல் குடும்பம்
கே: படகு ஓட்டறீங்க.. ரிக்ஷா ஓட்டறீங்க.. வாலிபால், கால்பந்தெல்லாம் விளையாடறீங்க.. திடீர்னு பாடறீங்க.. ஜெயக்குமாரின் அடையாளம் தான் என்னவோ?
ப: என்னுடைய குடும்பமே அரசியல் குடும்பம். எனது அப்பாவை 1968 ஆம் ஆண்டு கவுன்சிலர், மண்டலக் குழு தலைவர், கல்விக் குழுத் தலைவர் ஆக்கியது அறிஞர் அண்ணா. தந்தை பெரியார் காலத்திலிருந்தே திராவிடக் குடும்பமாகவே இருக்கிறது. திராவிட பற்றாளர் என்பதுதான் என்னுடைய அடையாளம். நீங்கள் சொன்னது எல்லாம் Extra Curriculum Activities. இவை இல்லாமல் வாழ்க்கை இருக்காது. நாங்கள் சின்ன வயதில் இருந்தே காசிமேட்டில் வசித்து வந்தேன். அங்கு சுடுகாடுகள்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம். இங்கு காத்தாடி விடுதல், கில்லி, கோலி, பம்பரம், சீட்டு கட்டு விளையாடுதல், ஹாக்கி, கிரிக்கெட், ஃபுட்பால் உள்ளிட்டவைகளை செய்துள்ளோம்.
கடலில் நீச்சல்
ஜிம்முக்கு செல்வேன், நீச்சல் அடிப்பேன்... இருப்பதிலேயே நீச்சல்தான் மிகச் சிறந்த உடற்பயிற்சி, நான் இதை கடலில் கற்றுக் கொண்டேன். அப்போதே நான் நீச்சலில் சாம்பியன். பாடறதும் நானாக கற்றுக் கொண்டதுதான். எனக்கு சங்கீதமே தெரியாது. இருந்தாலும் நான் பாடுவேன். நான் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எனக்கு காய்ச்சல் இருந்தது, நான்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். என்னை அப்போது பாடவைத்தார்கள்.
புதிய பாடல்
கே: பழைய பாடல்கள் மட்டும்தான் பாடுவீர்களா, இல்லை இப்போது இருக்கும் பாடல்களை பாடுவீர்களா?
ப: தற்போது வரும் பாடல்களை நான்பார்ப்பதே இல்லை. அதெல்லாம் பாடல்களா, அதில் என்ன கருத்து இருக்கிறது? "யார் வூட்ல பார்ட்டி, நம்ம வூட்ல பார்ட்டி" இதெல்லாம் ஒரு பாட்டா?
எப்படி
கே: உங்கள் மீது நிறைய விமர்சனங்கள் வருகிறதே அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
ப: முன்னாடி இருந்த ஜெயக்குமார் வேறு, இப்போது இருக்கும் ஜெயக்குமார் வேறு, அதாவது இப்போது அரசியலில் இருப்பதால் அந்த பண்பாடு, நாகரீகம் கருதி அமைதியாக இருக்கிறேன். ஆரோக்கியமான விமர்சனங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் சில பத்திரிகைகள், யூடியூப் சேனல்கள் கையில் பேனா இருப்பதால் கண்டபடி எழுதுகிறார்கள். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அதெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும். இவர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லது கடவுள்தான். என்னை பற்றிய விமர்சனங்களை நானும் எனது குடும்பத்தினரும் சட்டை செய்வதே இல்லை.
ஜெயலலிதா
கே: முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி அவர்கள் குறித்து ஒரு வரியில் சொல்லுங்கள் சார்?
ப: ஜெயலலிதா பல மொழிகளில் திறமையானவர், ஆங்கிலத்தில் அவர் பேசுவதை இதுவரை எந்த தலைவரும் பேசியதில்லை. தீர்மானம் ஏதேனும் இருந்தால் எங்களை அழைத்து எழுத சொல்லி வாசிக்க வைப்பார், பிழைகளை திருத்துவார், அவர் அருமையான டிக்டேட்டர். சுவாரஸ்யம் இல்லாவிட்டால் வேற மாதிரி எழுதுங்கள் என ஐடியா கொடுப்பார்.
கருணாநிதி என்றால் நகைச்சுவை. திமுக ஆட்சியில் காவல் துறைக்கு உணவு படியை குறைத்து விட்டார்கள். அப்போது நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து இதுகுறித்து கேள்வி கேட்டேன். அதற்கு கருணாநிதி அளிக்க பதில்: ஜெயக்குமாரை பார்த்தால் உணவு படி குறைந்தது போல் தெரியவில்லையே என கூறினார். இதை கேட்டு நான் உள்பட அனைவரும் சிரித்து விட்டோம். பின்னர் உறுப்பினர் ஜெயக்குமார் கூறிய கருத்துகளை பரிசீலனை செய்வோம் என பதில் அளித்தார்.