சூப்பர் செய்தி! 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு.. இப்போது தினசரி சம்பளம் எவ்வளவு தெரியுமா
சென்னை: ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளர்களுக்கான ஊதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் பொதுமக்களுக்கு 100 நாட்கள் கட்டாயம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 75 சதவீதம் மத்திய அரசும், 25% மாநில அரசும் வழங்குகிறது. அதன்படி இத்திட்டத்திற்காக மத்திய அரசு ஏற்கனவே ரூ. 674 கோடியை விடுவித்துவிட்டது. இந்தச் சூழலில் மாநில அரசின் பங்கான 25 சதவீதம், அதாவது ரூ 224 கோடியை தமிழக அரசு தற்போது விடுவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் இப்போது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஊராட்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில் ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2021-2022 நிதியாண்டிற்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் என இரு பாலருக்கும் இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தினசரி ஊதியம் ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் வழங்கப்பட்ட தினசரி ஊதியத்தை விட 8 ரூபாய் அதிகமாகும்.
இதில் நிர்வாக செலவுகளுக்கு ரூபாய் 49.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ 949.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications