“பெண் நிர்வாணமாக நின்றால்..” பாஜக கேசவ விநாயகம் எப்படிப்பட்டவர்? "டெய்சியின்" பேச்சால் புதிய சர்ச்சை
சென்னை: திருச்சி சூர்யாவால் செல்போனில் தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த டெய்சி, அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் குறித்து அளித்துள்ள நேர்காணல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மற்றும் பாஜகவை சேர்ந்த சிறுபான்மை அணி தலைவர் டெய்சிக்கும் இடையே கட்சி பொறுப்பு தொடர்பாக தொடர் மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
இதனை அடுத்து செல்போனில் டெய்சியை தொடர்புகொண்ட சூர்யா சிவா, தகாத வார்த்தைகளில் இழிவாக பேசியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பேச்சை மீறிய ஈபிஎஸ் டீம் மாஜி..? ஜெயலலிதாவுக்கு இன்றே திதி கொடுத்த ஓஎஸ் மணியன்! பரபர!
பரபரப்பு ஆடியோ
செல்போனில் டெய்சியிடம் பேசிய சூர்யா சிவா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட பலரது பெயர்களை பயன்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்விட்டர் பதிவு
சமூக வலைதளங்களில் இந்த ஆடியோ வெளியாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. பாஜகவில் அங்கம் வகித்த நடிகை காயத்ரி ரகுராம் இதற்காக சூர்யா சிவாவையும் அவருக்கு பதவி வழங்கியதையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் வெளியிட்ட பதிவில், "சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அண்ணாமலை நடவடிக்கை
இதனை தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "கட்சிக் கட்டுப்பாட்டை மீறி காயத்ரி ரகுராம் செயல்படுவதால் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்." என்று அறிவித்தார். அதேபோல் "ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை திரு சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்." என்றும் உத்தரவிட்டார்.
சமாதானம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக தலைமை இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை தொடர்ந்து திருச்சி சூர்யாவும் டெய்சியும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, "திருச்சி சூர்யா எனக்கு தம்பியை போன்றவர். எங்களுக்கு இடையே அக்கா - தங்கை போன்ற உறவு உள்ளது." என்று டெய்சி கூறினார்.
கேசவ விநாயகம்
அதன் பின்னர் சூர்யா சிவாவை கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதற்கிடையே சூர்யா சிவா ஆடியோவில் கேசவ விநாயகம் பற்றிய புகாரை அவர் கூறி இருப்பதால் அவரிடம் விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பது குறித்து பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருந்தனர்.
டெய்சி ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட டெய்சி, "படுத்து பதவி வாங்கி இருப்பே 'என்று மனசாட்சியேயின்றி, வக்ர புத்தியோடு பேசும் ஆண்கள், தன் வீட்டு பெண்களை அப்படி விட்டு பிழைப்பு நடத்தினால் மட்டுமே இப்படி எழுத மனசு வரும்! இறைவனுக்கு பயந்து வாழும் நல்ல மனிதனால் இப்படி குரூரமாக மற்றவனை பேச முடியாது! வெந்த மனதில் ஈட்டி பாய்ச்சாதீர்!" என்று தெரிவித்தார்.
நேர்காணலில் சர்ச்சை
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் ஊடகத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில் பாஜக மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவர் டெய்சி கலந்துகொண்டார். அப்போது பாஜக அமைப்பு செயலாளரான கேசவ விநாயகம் குறித்து சூர்யா சிவா தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "கேசவ விநாயகம் முன் ஒரு பெண் ஆடைகள் இன்றி நின்றால் கூட திரும்பி பார்க்க மாட்டார்." என்று தெரிவித்து இருக்கிறார். டெய்சியின் இந்த கருத்தும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.