கட்சி உள்ளேயே சுற்றிய "சூர்யா" ஆடியோ?.. அதிர்ந்த டெய்சி.. அண்ணாமலைக்கு தெரியும்! லீக் செய்தது யார்?
சென்னை: பாஜகவின் திருச்சி சூர்யா சக நிர்வாகி டெய்சி சரணை கடுமையாக திட்டியதாக கூறப்படும் ஆடியோ பாஜக கட்சிக்கு உள்ளேயே வட்டமடித்துக்கொண்டு இருந்ததாக டெய்சி சரண் விமர்சனம் வைத்துள்ளார்.
பாஜகவில் மைனாரிட்டி நலப்பிரிவு தலைவராக இருக்கும் டெய்சி சரணை பாஜக ஓபிசி நலப்பிரிவு மாநில தலைவர் திருச்சி சூர்யா போன் செய்து மிரட்டியதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் பேசுவது சூர்யாதானா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடத்த பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருக்கிறார். 1 வாரத்திற்கு பாஜக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள கூடாது என்று அண்ணாமலை திருச்சி சூர்யாவிற்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
Exclusive: பாஜகவிலிருந்து விலகமாட்டேன்! அண்ணாமலை நல்ல முடிவை எடுப்பார்! நம்பிக்கை தளராத டெய்சி சரண்!
என்ன நிலைமை?
இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு இந்த விவகாரம் முன்பே தெரியும் என்று கூறப்படுகிறது. 15 நாட்களுக்கு முன்பே இது தொடர்பாக அண்ணாமலையிடம் கூறியதாக டெய்சி சரண் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவிற்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.
இப்போதுதான் தெரியும்
இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான திரு கனக சபாபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம், என்று கூறியுள்ளார். இதில் இந்த விவகாரம் நேற்றுதான் தனது கவனத்திற்கு வந்தது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
டெய்சி சரண் ட்விட்
இது தொடர்பாக டெய்சி சரண் செய்துள்ள ட்விட்டில், பாஜகவை விட சிறந்த கட்சி, தலைவர் அண்ணாமலையை விட திறமையான தலைவரை நாம் ஒருநாளும் பெற்றுவிட முடியாது. அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் கால அவகாசம் கொடுத்து பொறுமை காக்க வேண்டும். ஆடியோ ரிலீஸ் பண்ணியவர்களை தலைமை கண்டுபிடிக்க வேண்டும். வாழு! வாழ விடு என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டு உள்ளார்.
கோபம்
சூர்யா விஷயத்தில் முறையாக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் புகார் செய்து,பின் கட்சி முக்கியஸ்தர்கள் மூன்று பேரிடம் நடவடிக்கைக்காக ஆடியோவை கொடுத்தேன்.ஆடியோ நக்கீரனுக்கு வருவதற்கு முன்னே கட்சிக்குள் பரவுவது அறிந்து அதிர்ந்து போனேன்!இப்படி ஒரு கேவலமான ஆடியோவை எப்படி நானே ரிலீஸ் செய்வேன்!, என்று கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார். ஆடியோ வெளியிட்டவர்களை கண்டுபிடிக்கும் வேண்டு என்று கூறியுள்ளார். இந்த ஆடியோவை ஒன்று டெய்சி ரிலீஸ் செய்திருக்க வேண்டும் அல்லது சூர்யா ரிலீஸ் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவில் இந்த ஆடியோ பகிரப்பட்ட நபர்கள் யாராவது ரிலீஸ் செய்திருக்க வேண்டும்.
ஆடியோ ரிலீஸ்
ஆனால் ஆடியோவை லீக் செய்தது யார் என்றுதான் தெரியவில்லை. இது தொடர்பாக விசிக ஆதரவு துணை நடிகை டாக்டர் ஷர்மிளா செய்துள்ள ட்விட்டில், அப்போ முன்பே இந்த விஷயம் அண்ணாமலைக்கு தெரியும் ... தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காம சூர்யாவோட காசிவரை டூர் போயிட்டு வந்திருக்கார்...இப்போ விஷயம் பொதுவெளிக்கு வந்ததும் வழியில்லாம - இப்போ தான் எனக்கு தெரியும்னு பொய் சொல்லி குழு போட்டு விசாரிப்போம்னு காலம் தாழ்த்துகிறார், என்று குறிப்பிட்டு உள்ளார். இது தற்போது பாஜக வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆடியோவை மீடியாவுக்கு கொடுத்தது யார் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் இதை லீக் செய்ததது யார் என்று உறுதியாக தெரியவில்லை. பாஜகவை சேர்ந்த மூத்த பெண் நிர்வாகி ஒருவர் இந்த ஆடியோவை மீடியாக்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கட்சியில் நடக்கும் தவறுகளை வெளியே கொண்டு வர அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.
சர்ச்சை ஆடியோ
சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. நீ எப்படி பதவி வாங்குன என்று தெரியும் என்று கூறி, அதோடு பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் அடிபட்டு உள்ளது. அதேபோல் நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை தீர்த்து காட்டுவேன் என்று பேசி உள்ளார். உன்னை தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா பேசியதாக கூறப்படுகிறது. உன்னுடைய உடல் மெரினாவில் கிடக்கும் என்றும் அந்த ஆடியோவில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளது. எதிரில் அந்த பெண் டெய்சி அமைதியாக விளக்கம் கொடுக்க முயன்றும், சூர்யாவின் குரல் தொடர்ந்து கடுமையாக பேசிக்கொண்டு இருக்கிறது.