தர்பார் நஷ்டமும்.. ரஜினி கோபமும்.. அன்புச்செழியன் வீட்டில் நடந்த ரெய்டுக்கு இப்படி ஒரு பின்னணியா?
பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு பின் தர்பார் படமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு பின் தர்பார் படமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அன்புச்செழியனுக்கு நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் இரண்டு நாட்கள் முன் நடந்த வருமான வரித்துறை சோதனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை ஏன் நடந்தது, நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் திடீர் சோதனை நடந்தது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளது.
பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அன்புச்செழியன் யார்
இந்த அன்புச்செழியன் பெரிய அளவில் அரசியல் பின்னணியை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக அதிமுகவிலேயே இவருக்கு நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு அன்புச்செழியன் நிறைய நிதி உதவி அளித்து இருக்கிறார். அதிமுகவின் அமைச்சர்கள் பலர், அன்புச்செழியன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்கள். அன்புச்செழியன் மீது யாரும் இத்தனை நாட்கள் கை வைக்காமல் இருக்கவும் இதுதான் காரணம்.
திமுக நெருக்கம்
அதேபோல் திமுகவினர் சிலரும் அன்புச்செழியனுக்கு நெருக்கம்தான். இத்தனை வருடமாக கந்து வட்டி தொழில் நடத்தி வரும் அன்புச்செழியன் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கிறது. தற்கொலைக்கு தூண்டியது, கொலை மிரட்டல் என்று நிறைய வழக்குகள் இருக்கிறது. ஆனால், திமுகவும் சரி, அதிமுகவும் சரி அன்புச்செழியன் மீது கை வைத்ததே இல்லை. இவருக்கு அவ்வளவு செல்வாக்கு இரண்டு காட்சியிலும். இப்போது திடீர் என்று வருமான வரித்துறை அன்புச்செழியனை நெருக்கி உள்ளது.
காரணம் என்ன
இதற்கு காரணம் இருக்கிறதாம். தர்பார் பட வசூல் பிரச்சனையில் நடிகர் ரஜினிகாந்திற்கு அன்புச்செழியனுக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். தர்பார் படத்தை தென் மாவட்டங்களில் ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்கள் பலர் அன்புச்செழியனுக்கு நெருக்கம் ஆனவர்கள். இவர்கள் அன்புச்செழியனிடம் கடன் வாங்கித்தான் தர்பார் படத்தை வாங்கி, பின் வெளியிட்டு இருக்கிறார்களாம். ஆனால் தர்பார் மூலம் இந்த விநியோகஸ்தர்கள் முதலீடு செய்த பணம் திரும்பி வரவில்லை.
திரும்ப கேட்டார்
இதற்கு இடையில் விநோயோகஸ்தர்களுக்கு கொடுத்த பணத்தை அன்புச்செழியன் கேட்டு இருக்கிறார். பண விஷயத்தில் அன்புச்செழியன் கொஞ்சம் கறாரான ஆள் என்று கூறுகிறார்கள். அன்புச்செழியன் கொடுத்த அழுத்தத்தால்தான் தர்பார் படத்திற்கு விநோயோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டனர் என்கிறார்கள். விநியோகஸ்தர்களிடம் தான் கொடுத்த பணத்தை அன்புச்செழியன் திரும்ப கேட்க, கையில் காசு இல்லாத விநோயோகஸ்தர்கள் நேரடியாக ரஜினி வீட்டு வாசலில் போராடி இருக்கிறார்கள்.
போராட்டம் காரணம்
இந்த போராட்டத்திற்கு காரணம் அன்புச்செழியன்தான் என்று மதுரையில் பேசிக்கொள்கிறார்கள். இதனால் கோபம் அடைந்த ரஜினி, சில பாஜக தலைவர்களிடம் அன்புச்செழியன் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அன்புச்செழியனின் செயல் குறித்து அவர் பேசி இருக்கிறாராம். பாஜக தலைவர்கள் மத்தியில் இதை சொல்லவே இந்த ரெய்டு நடந்தது என்கிறார்கள். இந்த ரெய்டு நடந்த பின் அன்புச்செழியன் தர்பார் குறித்து அழுத்தம் கொடுக்கவில்லை. தர்பார் வசூல் தொடர்பான போராட்டங்களும் நின்றுவிட்டது என்கிறார்கள்.
பின்னணி
இந்த ரெய்டு மொத்தமும் அன்புச்செழியன் - தர்பார் - ரஜினி இடையிலான பிரச்சனைத்தான். விஜய்க்கும் இதற்கும் தொடர்பில்லை. இத்தனை நாட்கள் பாதுகாப்பாக இருந்த அன்புச்செழியன் இப்போது குறி வைக்கப்பட இதுதான் காரணம் என்று கூறுகிறார்கள். அதே சமயம் அன்புச்செழியனுக்கு எதிரான வேறு சிலர் புகார் கொடுத்தனர். இதற்கும் ரஜினிக்கும் தொடர்பில்லை என்றும் மதுரையில் சிலர் பேசிக்கொள்கிறார்கள்.