வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..நாளை கரையை கடக்கும்..தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கும்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை பகுதியை நாளை அதிகாலை கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது. அதன் காரணமாக, தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதி கனமழை எச்சரிக்கை
இன்றைய தினம் திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

15 மாவட்டங்களில் கனமழை
இன்றைய தினம் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நீலகிரி, திண்டுக்கல், தேனி ரெட் அலர்ட்
12 ஆம் தேதியன்று நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்தம்
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதால் வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை கரையை கடக்கும்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை பகுதியை நாளை அதிகாலை கரையை கடக்கும். நாளை கரையை கடந்து பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications