வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி... சூறாவளிக்காற்று வீசும் - தமிழகத்தில் மிதமான மழை
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் டிசம்பர் 17, 18ஆம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் தீவிரமாக கொட்டித்தீர்த்த வடகிழக்குப் பருவமழை சற்றே ஓய்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. திருக்குவளை 3, திருப்பூண்டி , கோடியக்கரையில் தலா 2, தொண்டி, திருத்துறைப்பூண்டி தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக டிசம்பர் 16,17ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் மிதமான மழை - வட மாவட்டங்களில் வறண்ட வானிலை
வறண்ட வானிலை
18,19ஆம் தேதிகளில் தென் மாவடங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 20ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மேக மூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடலில் பலத்த காற்று
16.12.2011 முதல் 20.12.2021 வரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சூறாவளிக்காற்று
நாளைய தினம் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாககூடும் இதன் காரணமாக 17.12.2021 முதல் 19.12.2021 வரை பூமத்திய ரேகை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.