வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், சிந்திப்பதை நிறுத்தாதே.. அதுதான் மூலதனம் - அப்துல்கலாம்
குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த ஏபிஜெ அப்துல்கலாமின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளில் அவரது பொன் மொழிகளை நினைவு கூறுவோம்.
சென்னை: வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், சிந்திப்பதை நிறுத்தாதே.. அதுதான் மூலதனம் என்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் எபிஜெ அப்துல்கலாம் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் எபிஜெ அப்துல்கலாமின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளில் மக்களுக்காகவும் இளம் தலைமுறையினருக்காகவும் அவர் கூறிச்சென்ற பொன் மொழிகளை நினைவு கூறுகிறோம்.
ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் எபிஜெ அப்துல் கலாம் கடந்த 2015ஆம் ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்து மரணமடைந்தார். கலாம் மறைந்து இன்றுடன் ஆறாண்டுகள் நிறைவடைந்து விட்டன.
அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று 6ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாமின் நினைவிடம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் அவர்களின் உறவினர்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர்கள் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கலாம் பொன் மொழிகள்
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன. முதல் வெற்றிக்கு பின் ஓய்வெடுக்காதீர்கள், ஏனென்றால் இரண்டாவதில் நீங்க தோல்வியடைந்தால், உங்களின் முதல் வெற்றி வெறும் அதிர்ஷ்டம் என்று பேச பல உதடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

சூரியனைப் போல ஒளிர
உங்கள் கனவு நிறைவேறுவதற்கு முதலில் நீங்கள் கனவு காணவேண்டும். சூரியனை போல ஒளிர வேண்டுமென்றால், முதலில் சூரியனை போல எரிய வேண்டும். மனிதர்களுக்கு கஷ்டங்கள் தேவை, ஏனென்றால் மகிழ்ச்சியை அனுபவிக்க அவை தான் காரணம்.

நாம் தனியாக இல்லை
வானத்தை பாருங்கள், நாம் தனியாக இல்லை, கனவு காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் இந்த அண்டசராசரமே நட்புடன் சிறந்ததை அள்ளிகொடுக்கும். நீங்கள் இறக்கைகளோடு பிறந்தவர்கள், தவழாதீர்கள். மேலே மேலே பறக்க அதனை உபயோகிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நோக்கங்கள்
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்! ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.

பிரச்சினைகளை சமாளியுங்கள்
தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

துணிச்சல்
காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!. கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

பதற்றம் வேண்டாம்
அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு! வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள். வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு!.












Click it and Unblock the Notifications