வேட்டை தொடரும்.. கந்து வட்டி கும்பலுக்கு இருக்கு கச்சேரி.. ஒரே வாரத்துல 32 பேருக்கு காப்பு!
சென்னை : கந்து வட்டி, மீட்டர் வட்டி தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 124 புகார்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டுள்ளன என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
124 புகார்களில் 89 புகார் மனுக்களின் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 32 கந்து வட்டி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
3 பேர் குழு அமைப்பு... எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்... டி.ஆர்.பாலு பரபரப்பு..!
கந்து வட்டி தொடர்பான வழக்கில் கைதான 22 பேரிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டிஜிபி சைலேந்திர பாபு
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சமீபத்தில் கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து டி.ஜி.பி சைலேந்திரபாபு, தமிழகம் முழுவதும் கந்து வட்டியை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் டிஜிபி இதற்காக, 'ஆபரேஷன் கந்து வட்டி' என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
ஆபரேஷன் கந்து வட்டி
இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், "கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள 'ஆபரேஷன் கந்து வட்டி' என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள கந்து வட்டி வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
நடவடிக்கை
கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவைத் தொடர்ந்து கந்து வட்டி குறித்த புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'ஆபரேஷன் கந்து வட்டி' மூலம் தமிழகம் முழுவதும் பல கந்து வட்டி குற்றவாளிகள் சிக்கி வருகின்றனர்.
ஒரு வாரத்தில்
இந்நிலையில், இதுகுறித்து இன்று டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கந்து வட்டி, மீட்டர் வட்டி தொடர்பாக ஒரு வாரத்தில் 124 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக 89 புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 32 கந்து வட்டி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
பறிமுதல்
தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகளும், நாமக்கல், சேலம் மாநகரில் தலா 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 22 பேரிடம் பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் ஆவணங்கள் என 40 லட்சம் மதிப்புள்ள புரோ நோட்டுகள் , பத்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.