தனுஷுக்கு என் நடிப்பு பிடிக்கல.. 2016 ஃபிலிம் ஃபேர் மேடையிலேயே சீண்டிய நயன்தாரா.. ஃப்ளாஷ்பேக்!
சென்னை: 'நானும் ரௌடிதான்' படத்தில் இருந்தே தனுஷ் - நயன்தாரா இடையே புகைச்சல் இருந்து வந்தது. அந்தப் படத்தின் மூலமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் காதலர்கள் ஆன நிலையில், தனுஷ் சில காரணங்களால் இருவர் மீதும் கோபமாக இருந்துள்ளார். 2016 சமயத்திலேயே, இதுபற்றி நயன்தாரா பொடி வைத்துப் பேசி இருந்தார். 2016ல் நயன்தாரா என்ன சொன்னார் என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று அசத்தி வருகிறார். அதேபோல, நடிகை நயன்தாரா, நாயகர்கள் மட்டுமே கோலோச்சிய தமிழ் சினிமாவில் கதாநாயகியாக உச்சம் தொட்டவர். பல ஆண்டுகளாக, நம்பர் 1 நடிகையாக, அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருந்து வருபவர்.

நடிகை நயன்தாரா, தனுஷ் உடன் இணைந்து 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் நடித்து இருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான 'யாரடி நீ மோகினி' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவிற்கு ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. இந்த படத்திற்கு பின்னர் தனுஷ் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் நடிகை நயன்தாரா ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார்.
அதன்பிறகு, தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரிப்பில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரௌடி தான்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா 'காதம்பரி' என்ற கேரக்டரில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று இருந்தார்.
நானும் ரௌடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தாலும், தனுஷ், இயக்குநர் விக்னேஷ் சிவன் மீதும் நயந்தாரா மீதும் மன வருத்தத்தில் இருப்பதாக அப்போதே தகவல்கள் வெளியாகின. அதற்கு காரணம், படத்தின் பட்ஜெட் அதிகரித்தது தான் எனக் கூறப்பட்டது. முதலில் விக்னேஷ் சிவன் சொன்ன பட்ஜெட்டை தாண்டியதாலும், சொன்ன தேதியில் படத்தை முடிக்காமல் இழுத்ததாகவும் தனுஷ், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு 'நானும் ரௌடிதான்' படத்திற்காக நடிகை நயன்தாரா சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்று இருந்தார். இந்த விருதை வாங்கிய பின்னர் மேடையில் பேசிய நயன்தாரா 'தயாரிப்பாளர் தனுஷுக்கு நன்றி. நான் தனுஷுக்கு சாரி சொல்ல வேண்டும். ஏனென்றால் தனுஷுக்கு என்னுடைய நடிப்பு இந்தப் படத்தில் சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே, உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் தனுஷ், கண்டிப்பாக அடுத்த முறை நான் சிறப்பாக செய்வேன்" என்று தெரிவித்திருந்தார்.
அதாவது, சிறந்த நடிகைக்கான விருதை தான் பெற்ற மேடையிலேயே, தனது நடிப்பு தனுஷுக்கு பிடிக்கவில்லை எனக் கூறி இருந்தார் நயன்தாரா. அதன் பிறகு நயன்தாரா, தனுஷ் இணைந்து படங்களில் நடிக்கவும் இல்லை. தனுஷ் தயாரித்த படம் எதிலும் நயன்தாரா நடிக்கவில்லை.
இந்நிலையில் தான் தற்போது, தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பகிரங்க கடிதம் எழுதியுள்ளார் நயன்தாரா. "கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும் இல்லாமல், சமாதானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றி பெறுவதும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது." எனக் கூறியுள்ளார் நயன்தாரா.












Click it and Unblock the Notifications